சொத்துக் குவிப்பு சர்ச்சை - மீண்டும் பணிக்குத் திரும்பினார் நீதிபதி தினகரன்
பெங்களூர்: சொத்துக் குவிப்பு சர்ச்சையில் சிக்கியதால் வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் நேற்று மீண்டும் விசாரணைகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, அந்தப் புகார்கள் பொய் என நிரூபிக்கப்படும் வரை விசாரணைகளி்ல் ஆஜராவதைத் தவிர்க்குமாறு கர்நாடக உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் தினகரனைக் கேட்டுக் கொண்டிருந்தது. இதனால் அவரும் கடந்த 16 நாட்களாக விசாரணையில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நேற்று முதல் தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மீண்டும் விசாரணைகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.
நேற்று சுமார் ஒரு மணி நேரம் விசாரணைகளை நடத்திய தலைமை நீதிபதி தன் முன்பு வந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்து முடித்தார்.
தலைமை நீதிபதி மீண்டும் பணிக்குத் திரும்பியது தொடர்பாக வக்கீல்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதனால் உயர்நீதிமன்ற பணிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அமைதியாக கழிந்தது.