எல்லை தாண்டிச் சென்ற தமிழக மீனவர்களைப் பிடித்தது இந்திய கடலோரக் காவல் படை
ராமேஸ்வரம்: இந்திய எல்லையைத் தாண்டிச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 விசைப் படகுகளையும், அதில் இருந்த மீனவர்களையும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் பிடித்து வந்து மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர். படகுகளின் லைசென்சுகளை ரத்து செய்ய மீன்வளத்துறை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் கொண்டு தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர் ராமேஸ்வரம் மீனவர்கள். ஸ்டிரைக் முடிந்து 2 நாட்களுக்கு முன்பு மீன்வளத்துறை அனுமதியுடன் 566 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்களை கண்காணிப்பதற்காக இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான அருணா ஆசப் அலி என்ற போர்க்கப்பல் கச்சத்தீவு அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தது.
நேற்று காலை எல்லை தாண்டி மீன் பிடித்து வந்ததாக அபிராகுனி, இமானுவேல், பத்மாவதி, ஆரோக்கியம்மாள், காளியம்மாள், செல்வராஜ், கருப்பசாமி, கண்மணி ஆகியோரின் படகுகள் உள்பட 11 படகுகளையும், படகுக்கு இருவர் வீதம் 22 மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் கமாண்டர் ஷைனி, கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், கி.ூ பிரிவு போலீசார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் 22 மீனவர்களையும், ராமேசுவரம் மீன் துறை உதவி இயக்குனரிடம் ஒப்படைத்தனர்.
தற்போது அவர்களின் படகுகளின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன் வளத்துறை உதவி இயக்குனர் இளம்வழுதி கூறினார்.
அவர் கூறுகையில், இந்திய கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 படகுகளையும், 22 மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் பிடித்து வந்து எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த 11 படகுகளின் உரிமங்களை ரத்து செய்வதுடன், மானிய டீசலும் வழங்கப்பட மாட்டாது. மேலும் இவர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்க மதுரை மீன்துறை துணை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.