சிந்தாமல், சிதறாமல் சென்னைக்கு நீர்: பூண்டி-செங்குன்றம் குழாய் திட்டம் துவக்கம்
சென்னை: பூண்டியிலிருந்து திறந்து விடப்படும் நீர் இனி ஒரு சொட்டு கூட குறையாமல், சிந்தாமல் சிதறாமல் சென்னை மக்களை சென்றடைய இருக்கிறது. இதற்காக 47 கிமீ தூரத்துக்கான பெரிய குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு தொடங்கப்படுகிறது.
சென்னை நகரின் முக்கிய நீர் தேக்க பகுதிகளில் பூண்டி சத்தியமூர்த்தி ஏரியும் ஒன்று. தற்போது கிருஷ்ணா நிதி நீர் திட்ட கால்வாய் மூலம் பூண்டியிலிருந்து சென்னை செங்குன்றத்தில் உள்ள நீர் தேக்க நிலையத்துக்கு திறந்து விடப்படுகிறது. அங்கு இருந்து சென்னை மக்களுக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது.
ஆனால், கால்வாயில் அனுப்பப்படும் நீரில் 65 சதவீதம் தான் செங்குன்றத்துக்கு செல்கிறது. மீதமுள்ள 35 சதவீத நீர் போகும் வழியில் வீணாகி விடுகிறது.
இதையடுத்து இப்பகுதியில் கால்வாய்க்கு பதிலாக ரூ. 9.11 கோடி மதிப்பில் பெரிய குழாய்களை பதிக்கும் திட்டம் குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான வேலைகள் கடந்த ஆண்டு ஜனவரியில் துவக்கப்பட்டு இந்த ஆண்டு ஆகஸ்டில் முடிந்தது.
இந்த திட்டம் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டது. இதன் செலவில் 35 சதவீதத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசும் ஏற்றுக்கொண்டன. மீத தொகையை மெட்ரோ குடிநீர் கழகம் வழங்கியது.
47 கிமீ தூரத்துக்கு குழாய்கள் அமைக்கும் பணி முடிந்து அவை துவக்கப்பட இருக்கிறது. இதற்காக பூண்டி பகுதியில் பம்ப் ஹவுஸ் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது ஒரு நாளைக்கு சுமார் 1 கோடி லிட்டர் நீர் இறைக்கும் சக்தி கொண்டது.
இந்த திட்டம் துவக்கப்படுவதன் மூலம் இனி பூண்டியில் திறந்துவிடப்படும் நீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் செங்குன்றத்துக்கு வந்து சேரும்.