யாழ். தமிழ் மக்களை சந்திக்க திருமாவளவனுக்கு ராணுவம் போட்ட தடை

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழு சென்று தமிழர்களை சந்தித்தது. ஏராளமான மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
அந்த மாணவர்கள் திமுக - காங்கிரஸ் தூதுக் குழுவிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். இதற்குப் பதிலளிக்க முடியாமல் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் தடுமாறினர்.
ஒரு மாணவர் அழுதபடி கூறுகையில், இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், வன்னிப் பகுதியில் இலங்கைப் படைகள் குண்டு மழை பொழிந்தன. இதில் பங்கருக்குள் பதுங்கியிருந்த எனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை நான் இழந்தேன். எல்லாவற்றையும் நான் இழந்து விட்டேன் என்று கூறியபோது டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அமைதியாக இருந்தனராம்.
இந்தக் கூட்டம் முடிந்ததும் அங்கு கூடியிருந்த தமிழர்களிடம் தனியாக பேச முயன்றுள்ளார் திருமாவளவன். ஆனால் ராணுவத்தினர் அதை அனுமதிக்காமல் தடுத்து விட்டனராம். இதனால் திருமாவளவனால் ஈழத் தமிழர்களிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் போயுள்ளது.
மேலும், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவில் இடம் பெற்றுள்ள எம்.பிக்களில், இதுவரை, டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் மட்டுமே பேசி வருகின்றனர். மற்ற யாரும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேசுவதற்கு இலங்கைத் தரப்பில் அனுமதி தரப்படவில்லையா என்பது குறித்து தகவல் இல்லை.
மலையகத் தமிழர்களுடன் சந்திப்பு...
இந்த நிலையில், நேற்று இலங்கை அமைச்சர் ஆறுமுகத் தொண்டைமான் அழைப்பின் பேரில் மலையகப் பகுதிக்கு திமுக -காங்கிரஸ் கூட்டணிக் குழுவினர் சென்றனர்.
ஹெலிகாப்டர் மூலம் வந்த இக்குழுவினர் அங்கிருந்து ஹட்டன் நகருக்கு வாகனத்தில் சென்றனர். ஹட்டன் நகரை வந்தடைந்த குழுவினருக்கு ஹட்டன் நகர் வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.
கனிமொழியைச் சூழ்ந்து கொண்டு மக்கள் அவரை மலர் மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.கலைஞர் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என உற்சாக கோஷங்கள் எழுப்பினர். இங்குள்ள தமிழர்கள் அனைவரும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் பகுதியில் தமிழக குழுவினருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதேசமயம், இந்திய வம்சாவளித் தமிழர்கள் பகுதியான மலையகத்தில் தமிழக குழுவினருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கனிமொழி மற்றும் திருமாவளவனின் பெயர்களை உரக்க உச்சரித்து இங்குள்ளவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவினர் கொட்டகலைக்குச் சென்றனர். அவர்களுக்கு அங்கும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது












Click it and Unblock the Notifications