முல்லைப் பெரியாறு-வழக்கறிஞர்களுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் கருணாநிதி இன்று ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளம் புதிய அணை கட்ட முயல்வது குறித்தும், இது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேரளத்துக்கு அனுமதி அளித்தது குறித்தும், இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகள் குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அடுத்தகட்டமாக என்ன வகையான நடவடிக்கை எடுப்பது என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
இக் கூட்டத்தி்ல் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம், காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர்கள் கே.பாராசரன், வி.கிருஷ்ணமூர்த்தி, ஜி.உமாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்க்கரை துறை ஊழியர்களுக்கு போனஸ்:
இந் நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
சர்க்கரை துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் 9,727 பேருக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகை ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 20 சதவீத போனஸ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அரசுக்கு ரூ. 6.9 கோடி செலவாகும்.
அதே போல பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவுகளை சேர்ந்த 83 பணியாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்கப்படும்.
இதனால் அரசுக்கு ரூ.6.98 லட்சம் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.