டாஸ்மாக் கடைக்குள் புகுந்த பஸ்!-ஒருவர் பலி
மதுராந்தகம்: மது வாங்குவதற்காக மதுக் கடை முன்பு நின்றிருந்த நபர், வேகமாக வந்த அரசு பஸ் மோதி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து நேற்று காலை திருவாரூருக்கு அரசு விரைவுப் பேருந்து கிளம்பியது. நண்பகல் 12 மணியளவில், மதுராந்தகம் அடுத்த அய்யனார்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அந்தப் பேருந்து வந்தது.
அங்கு ஜி.எஸ்.டி. சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மொபட்டில் சிலர் சாலையின் குறுக்கே வந்து விட்டனர். இதனால் வேகத்தைக் குறைக்க முடியாமல் அவர்கள் மீது பஸ் மோதியது.
பின்னர் தாறுமாறாக ஓடிய பேருந்து, சாலையில் நடுவில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் தெளிக்க நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் இடித்து விட்டு ரோட்டில் இருந்து சுமார் 30 அடி தூரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்தது.
இதனால் சாலையோரம் நடந்து சென்றவர்களும், மதுபான கடைக்கு முன்பு நின்றவர்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதில் கடைக்கு மது வாங்குவதற்காக காத்திருந்த மனோகரன்(45) பஸ்சுக்கும், சுவருக்கும் இடையே சிக்கி நசுங்கி பரிதாபமாக இறந்தார். இவர் சிலாவட்டம் கலைஞர் காலனியை சேர்ந்தவர். பெயிண்டர்.
மதுராந்தகம் மோகன் (22), மாம்பாக்கம் சக்திவேல் (27), சிலாவட்டம் முருகன் (47), தேவராஜ்(37), எல்லப்பன்(40), வினோத்(22) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
பஸ் டிரைவர் அசோகன், கண்டக்டர் பாலமுருகன், பயணிகள் 5 பேர் மற்றும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் குள்ளன் உள்பட மொத்தம் 19 பேர் லேசான காயம் அடைந்தனர்.
இவர்களில் 4 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், 3 பேர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.
விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கே.காயத்ரிதேவி ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications