கடலோர மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யலாம் - வானிலை மையம்
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை, தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளையொட்டி வங்கக்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
இன்றும் (சனிக்கிழமை) கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், அதிக பட்சமாக ராமநாதபுரத்தில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.
சாத்தான்குளத்தில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பாம்பன், திருச்செந்தூர் தலா 7 செ.மீ., திருப்பத்தூர், விராலிமலை, சங்கராபுரம் தலா 5 செ.மீ., பட்டுக்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், கடலாடி தலா 4 செ.மீ. பரங்கிப்பேட்டை, கும்பகோணம், பேராவூரணி, திருத்துறை பூண்டி, வலங்கைமான், கந்தர்வகோட்டை,சீர்காழி, ராமேஸ்வரம், தொண்டி, மணிமுத்தாறு, ராதாபுரம், விளாத்திக்குளம், கரூர், ஊத்தங்கரை,மேட்டூர், மருங்காபுரி தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையில் வெயில் - மேகமூட்டம்...
சென்னை நகரில் கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை. லேசான தூறல் சில இடங்களில் காணப்பட்டது.
நேற்று ஓரளவு வெயில் அடித்தது. இன்றும் லேசான வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. அவ்வப்போத வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. லேசான குளிர்ந்த காற்றும் வீசுகிறது.