சென்னையில் பட்டம் விற்கலாம்.. மாஞ்சா கூடாது!
சென்னை: சென்னை நகரில் பட்டம் விற்பதற்குத் தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை பட்டம் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
சென்னை நகரில் கடந்த 2007ம் ஆண்டு பட்டம் விடுவது தடை செய்யப்பட்டது. அந்த ஆண்டு, மாஞ்சா தடவப்பட்ட பட்டக் கயிறு 8 வயது சிறுவனின் கழுத்தை அறுத்து பரிதாபமாக உயிரைப் பறித்ததைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் சமீபத்தில் பட்டம் விற்கவும் போலீஸார் தடை விதித்தனர். மேலும் பட்டம் விற்பதும், மாஞ்சா கயிற்றுடன் பட்டங்களை பறக்க விடுவதும் ஜாமீனில் வெளி வர முடியாத குற்றமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு பட்ட விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், பட்டம் விற்பதற்குத் தடை கிடையாது என உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், உயிரைப் பறிக்கும் ஆபத்தான மாஞ்சா தடவிய பட்டங்களை விற்பதற்கும், பறக்க விடுவதற்கும் தடையை நீக்க அது மறுத்து விட்டது.
மாஞ்சா என்றால் என்ன...?
பசையுடன், கண்ணாடிகளை உடைத்துப் பொடியாக்கி அதைத் தடவி அந்தப் பசையை பட்டங்களின் கயிறுகளில் தடவுவார்கள். இப்படி மாஞ்சா தடவப்படும் கயிற்கள் படு ஆபத்தானவை. அரிவாள், கத்தியைப் போல படு கூர்மையாக இருக்கும். இவை வேகமாக வந்து கழுத்தில் பட்டால் கழுத்து அறுபட்டுப் போகும், நரம்புகள் துண்டிக்கப்பட்டு விடும்.
இப்படி மாஞ்சா தடவிய பட்டக் கயிறுகளால் சென்னையில் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.