யுஎஸ்-மூக்குத்தி..இந்திய பள்ளி மாணவி சஸ்பெண்ட்
நியூயார்க்: பள்ளியின் டிரஸ் கோட் விதிமுறைகளை மீறி, மூக்கு குத்திக் கொண்டதால் 12 வயது இந்திய மாணவி அமெரிக்க பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் உடா மாகாணத்தைச் சேர்ந்தவர் சூசன்னா பாப்லா. இவரது பெற்றோர் இந்தியர்கள். உடாவில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார் சூசன்னா.
இந்தியாவில் மூக்கு குத்திக் கொள்வது ஒரு கலாச்சார அடையாளமாக உள்ளது. அதைப் பின்பற்றி தானும் மூக்கு குத்திக் கொண்டார் சூசன்னா.
ஆனால் அது அவருக்கு எதிராக மாறி விட்டது. அவர் படித்து வந்த பள்ளி நிர்வாகம், பள்ளியின் டிரஸ் கோட் விதிகளை மீறி விட்டார் என்று கூறி சூசன்னா பாப்லாவை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், மூக்கு குத்திக் கொள்வது என்பது இந்திய கலாச்சாரத்தில் கட்டாயமான ஒன்று இல்லை. மேலும், இது மத பாரம்பரியமும் கிடையாது. எனவே மத பாரம்பரியம் என்று காரணம் கூறி சூசன்னா பாப்லா தப்ப முடியாது என்று கூறியுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து சூசன்னா கூறுகையில், இந்தியாவில் உள்ள எனது குடும்பத்தினருடனான எனது நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காகவே நான் மூக்கு குத்திக் கொண்டேன். எனது வேர்களை என்னால் மறக்க முடியாது என்றார்.
சூசன்னாவின் தாயார் ஷெர்லி பாப்லா கூறுகையில், தனது பாரம்பரியத்தையும், மரபையும் சூசன்னா பின்பற்ற முடிவு செய்தபோது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இது இவ்வளவு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என நான் நினைக்கவில்லை என்றார்.
தற்போது சூசன்னா மீதான சஸ்பென்ட் உத்தரவை நீக்கியுள்ள பள்ளி நிர்வாகம், சூசன்னா சுத்தமான மூக்குத்தியை மட்டும் அணிந்து கொள்ளலாம், அது அழுக்குப் படக் கூடாது, அதனால் மற்ற யாருக்கும் தொந்தரவு வரக் கூடாது என்று கூறி அனுமதி கொடுத்துள்ளதாம்.
இதே போலத்தான் சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் விமான நிலையத்தில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்த இந்தியப் பெண் மூக்குத்தி குத்திக் கொண்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம்.