தினகரன் நிலம் தொடர்பான சர்ச்சை - போலீஸ் மிரட்டுவதாக தலித்கள் புகார்
டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமித்த நிலப் பகுதிக்குள் செல்ல விடாமல் போலீஸார் தங்களைத் தடுப்பதாகவும், பல்வேறு வழக்குகளைப் போடுவதாகவும், மிரட்டுவதாகவும் கூறி திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து தலித் சமுதாயத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
காவேரிராஜபுரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வைத்துள்ளார் தினகரன். இவற்றில் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளடங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த சர்ச்சையால் உச்சநீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு தினகரனுக்கு கை நழுவிப் போயுள்ளது.
இந்த நிலையில் தினகரனுக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாகவும், தங்களை மிரட்டிப் பொய் வழக்குகளைப் போட்டு வருவதாகவும் காவேரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து 3 பெண்கள் உள்ளிட்ட ஐந்து தலித் சமுதாயத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நீதிபதி தினகரன் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலம் குறித்து தலித் சமுதாயத்தினர் பேச அனுமதிக்காமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். உள்ளூர் போலீஸார், தலித் சமுதாயத்தினரை மிரட்டும் வகையில் நடந்து வருகின்றனர். இதனால் எங்களால் பேச முடியாமல் போனது.
தினகரன் நிலம் குறித்து நாங்கள் பேச முயன்றபோது போலீஸார் எங்களை மிரட்டிப் பொய் வழக்குகளைப் போட்டு வருகின்றனர். திருட்டு, பொது அமைதிக்குப் பங்கம், கொள்ளை என பல்வேறு வழக்குகளைப் போடுகின்றனர்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்களது சமுதாயத்தினரை ஜாமீனில் எடுக்க நாங்கள் கடுமையாக சிரமப்பட்டு வருகிறோம்.
கடந்த 15 வருடங்களாக நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த நிலங்களை தினகரன் ஆக்கிரமித்துள்ளார். எங்களது வாழ்வுரிமைகளான ஆடு மேய்த்தல், புல் அறுத்தல், நீர் நிலைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை வேலி போட்டு தடுத்து விட்டனர்.
இதுகுறித்து குரல் எழுப்பினால் உள்ளூர் போலீஸார் எங்களை மிரட்டுகின்றனர், பொய் வழக்குகளைப் போடுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆய்வுக் கழகம், பீப்பிள்ஸ் வாட்ச் ஆகிய இரு மனித உரிமை அமைப்புகளின் மூலமாக இந்த ஐந்து பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அக்டோபர் 7ம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்திய விசாரணையில், நீதிபதி தினகரன் கிட்டத்தட்ட 197 ஏக்கர் கிராம பொது நிலத்தை ஆக்கிரமித்து வேலி போட்டு வைத்திருப்பது உண்மைதான் என்று அறிக்கை கொடுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் இந்தப் புகாரை அப்படியே மறுத்து வருகிறார் பி.டி.தினகரன்.
இந்த நிலையில் தற்போது தினகரனுக்கு ஆதரவாக போலீஸார் தலித் சமுதாயத்தினரை மிரட்டுவதாக புதிய புகார் கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications