மதுரை- திமுகவிலிருந்து அட்டாக் பாண்டி திடீர் நீக்கம்

மதுரை திமுக வட்டாரத்தில் பிரபலமானவர் அட்டாக் பாண்டி. மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர். தினகரன் அலுவலக தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவர் அட்டாக் பாண்டி. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது அறிக்கையில் இவரைக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு மதுரை வட்டாரத்தில் பிரபலமானவர்.
அட்டாக் பாண்டி மீது ஆள் கடத்தல், அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீரைத்துறை காவல் நிலையத்தில் அட்டாக் பாண்டி மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கீரைத்துறை காவல் நிலையத்தின் ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
1999ம் ஆண்டு ஒரு தாக்குதல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் அட்டாக் பாண்டி.
அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருப்பதால் இவருக்கு மதுரை மாவட்ட வேளாண்மைக் குழுத் தலைவர் பதவி கிடைத்தது.
இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் அட்டாக் பாண்டி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாக கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதாக அறிவதால், தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
அட்டாக் பாண்டி நீக்கம், மதுரை வட்டார திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications