திமுகவுக்கு சமக, அதிமுகவுக்கு உஉக ஆதரவு
திருச்செந்தூர் & வந்தவாசி: திருச்செந்தூர், வந்தவாசி (தனி) தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மனு தாக்கல் இன்று தொடங்கியது.
இரு தொகுதிகளுக்கும் டிசம்பர் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான மனு தாக்கல் இன்று காலை துவங்கியது. டிசம்பர் 2ம் தேதி வரை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்யலாம்.
அதிமுக சார்பில் திருச்செந்தூரில் அம்மன் நாராயணன், வந்தவாசியில் முனுசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணனும், வந்தவாசியில் கமலக்கண்ணனும் போட்டியிடுகின்றனர்.
தேமுதிகவும் போட்டிடவுள்ளது. ஆனால், பாமகவும் இடதுசாரிகளும் தங்களது நிலையை இன்னும் அறிவிக்கவில்லை. இக் கட்சிகள் பெரும்பாலும் போட்டியிடாது என்றே கருதப்படுகிறது.
சீட் கேட்ட ராதிகா செல்வி:
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன் உள்பட 10 பேர் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதிமுகவில் இருந்து தாவி வந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அனிதாவுக்கே சீட் தரப்பட்டது.
வந்தவாசி தொகுதியில் சீட் கேட்டு மறைந்த எம்.எல்.ஏ. ஜெயராமனின் மகன் கமலக்கண்ணன், மனைவி எல்லம்மாள் உள்பட சுமார் 40 பேர் விண்ணப்பித்தனர். இதில் கமலக்கண்ணனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அழகிரியின் வியூகத்தால் வெல்வேன்-அனிதா:
திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,
தலைவர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு என் நன்றி. முதல்வரின் மகத்தான சாதனைகளாலும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் அயராத மக்கள் பணிகளாலும், தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரியின் தேர்தல் வியூகத்தாலும் திமுக எவரையும் வெல்லும் என்றார்.
திமுகவுக்கு சரத் ஆதரவு?:
இந் நிலையில் இடைத் தேர்தலில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிகிறது.
அதிமுகவுக்கு உ.உ.க. ஆதரவு:
அதே போல இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி அறிவித்துள்ளது.
107வது முறையாக போட்டியிடும் பத்மராஜன்:
இந் நிலையில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 107வது முறையாக தேர்தலில் போட்டியிட திருச்செந்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
உள்ளாட்சி, சட்டசபை, நாடாளுமன்றம் என எந்தத் தேர்தல் வந்தாலும் இவர் மனுதாக்கல் செய்வது வழக்கம்.
பெரும்பாலும் இவரது வேட்பு மனு பரிசீலனைக்கு பின் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். இதுவரை 106 முறை மனு தாக்கல் செய்து மொத்தம் 89 முறை தேர்தலில் போட்டியிட்ட பத்மராஜன் இதுவரை எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை.