கசாப்பை பாதுகாக்க இதுவரை ரூ. 31 கோடி செலவு!
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ரூ. 85 லட்சம் என்ற அளவுக்கு கசாப்புக்காக செலவிடப்பட்டு வருகிறது. 21 வயதாகும் கசாப், மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் தனி பிரிவில் அடைக்கப்பட்டுள்ளான்.
அவனது பாதுகாப்புக்காகவும், உடல் நலம் குன்றி விடாமல் ஆரோக்கியமாக இருப்பதற்காகவும், இப்படி பணத்தைக் கொட்டி செலவிட்டுக் கொண்டிருக்கிறது மகாராஷ்டிர அரசு.
கடந்த மே மாதம்தான் தீவிரவாதத் தாக்குதல் விசாரணை தொடங்கியது. இது அவ்வளவு சீக்கிரம் முடிவதாகத் தெரியவில்லை. இன்னும் 3 மாதங்கள் வரை விசாரணை நீடிக்கலாம் என அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறியுள்ளார்.
இதுகுறித்து மகாராஷ்டிர அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மகாராஷ்டி அரசுக்கு தற்போது உள்ள மொத்த கடன் தொகை மதிப்பு ரூ. 1.85 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. இருப்பினும் மகாராஷ்டிராவின் பாதுகாப்பு என்பது நாட்டின் பாதுகாப்பையும் குறிக்கும் என்பதால், செலவு குறித்து கவலைப்பட முடியாது. இதுவரை நாங்கள் நிதி நிலைமை குறித்து வெளிப்படையாக விவாதிக்கவில்லை என்கிறார்.
கசாப்புக்காக இதுவரை ரூ. 31 கோடி செலவிடப்பட்டிருப்பதாக கூறப்படுவது அதிகாரப்பூர்வமற்ற தகவல்தான். இதை விட கூடுதலாகவும் அது இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஆர்தர் சாலை சிறைச்சாலையிலும், ஜேஜே மருத்துவமனையிலும் மத்திய அரசின் உத்தரவுப்படி 2 சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கசாப்புக்காக அமைக்கப்பட்டவை இவை.
கசாப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக ஜேஜே மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதிப்பதற்காக அங்கு சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஏராளமான நவீன ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன. வாகனங்கள், பிற சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மகாராஷ்டிர அரசு அதிகாரி கூறுகையில், ஆர்தர் சாலை சிறையில் கசாப்புக்காக சிறப்புப் பிரிவு பெரும் பொருட் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. லாரி நிறைய வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டு வந்து மோதினால் கூட எதுவும் நேராத அளவுக்கு மிக பலத்த பாதுகாப்புடன் கூடிய சிறப்புப் பிரிவு அது.
நமக்குக் கிடைத்துள்ள ஒரே சாட்சி கசாப் மட்டுமே. எனவே அவனை எப்பாடு பட்டாவது காப்பாற்றியே ஆக வேண்டிய நிலையில் உள்ளோம். பாகிஸ்தானை அம்பலப்படுத்த நமக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய துருப்புச் சீட்டு கசாப் என்பதால்தான் இவ்வளவு செலவு செய்து வருகிறோம்.
அதேபோல ஜேஜே மருத்துவமனையில் குண்டு துளைக்காத சிறப்புப் பிரிவு கசாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 1 கோடி செலவு பிடித்தது. இருப்பினும் இதுவரை கசாப்பை அங்கு கொண்டு செல்லவில்லை. மாறாக, கசாப்புக்கு மருத்துவத் தேவை ஏற்பட்டால் மருத்துவர்கள் சிறைக்கே அழைத்து வரப்படுகின்றனர் என்றார்.
பல்வேறு உடல் உபாதைகள் தொடர்பாக கசாப்புக்கு இதுவரை கிட்டத்தட்ட 16 முதல் 24 டாக்டர்கள் வரை சிகிச்சை அளித்துள்ளனராம்.
இது போக ஆர்தர் சாலைச் சிறைச்சாலையைப் பாதுகாப்பதற்காக பெருமளவிலான மத்தியப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கசாப்புக்காக வாதாடும் வக்கீலுக்கும் அரசே சம்பளம் தருகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞரின் சம்பளக் கணக்கு தனி.
இது மிகப் பெரிய நிதிச்சுமைதான். ஆனால் நமக்கு வேறு வழியில்லை என்கிறது மத்திய அரசு.













Click it and Unblock the Notifications