கொலை செய்துவிட்டு ஆம்புலன்சில் தப்ப முயற்சி!-4 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி லாட்ஜில் உடன் தங்கியிருந்த பீகார் வாலிபரை அடித்து கொன்று விட்டு ஆம்புலன்சில் தப்ப முயன்ற 4 பேர் போலீசில் சிக்கினர். இது தொடர்பாக ரூம் பாய் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் சர்வீசுக்கு நேற்று மாலை 7.30 மணியளவில் சிலர் போன் செய்தனர். அவர்கள் 3ம் கேட் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள லாட்ஜில் தங்கியிருப்பதாகவும், தங்களுடன் உள்ள ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் உடனே வாருங்கள் என கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு ஆம்புலன்ஸ் சென்றது. ஆம்புலன்சை ரஞ்சித் என்பவர் ஓட்டினார். அவரை லாட்ஜுக்கு பின்புறம் வரும்படி அவர்கள் கூறினர். இதனால் ரஞ்சித் ஆம்புலன்சை லாட்ஜுக்கு பின்புறம் நி்றுத்தி விட்டு ஸ்டிரெச்சரை தயார் நிலையில் வைத்தார்.
அப்போது நான்கு பேர் சேர்ந்து ஒரு அட்டை பெட்டியை தூக்கிக் கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றினர். இதனை பார்த்த ரஞ்சித் அவர்களிடம் நோயாளி எங்கே என கேட்டார். முதலில் இந்த பெட்டியை ஏற்றி விட்டு பின்னர் நோயாளியை ஏற்றுவதாக கூறி சமாளித்தனர். ஆனால் பெட்டியை ஏற்றிய பின் அவர்களில் சிலர் ஆம்புலன்சில் ஏறினர். ரஞ்சித்திடம் போகலாம் என கூறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த ரஞ்சித் நோயாளியை எங்கே என மீண்டும் கேட்டார். அதற்கு அவர்கள் இந்த பெட்டியை நாங்கள் சொல்லும் இடத்திற்கு கொண்டு சென்றால் கூடுதல் பணம் தருகிறோம் என கூறியுள்ளனர்.
அவர்கள் மீதான சந்தேகம் வலுக்கவே ரஞ்சித் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வடபாகம் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வந்தனர். போலீசை கண்டதும் ஆம்புலன்சில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.
பெட்டியை கைப்பற்றிய போலீசார் அதனை திறந்து பார்த்தனர். அதில் ஒரு வாலிபரின் உடல் மடக்கி கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து லாட்ஜில் அந்த வாலிபர் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனை போட்டனர். அங்குள்ள சுவர் மற்றும் கட்டிலில் ரத்த கறை படிந்திருந்தது.
இதனை தொடர்ந்து அறையில் பதுங்கியிருந்த பீகார் மாநிலம் மத்துப்பூரை சேர்ந்த ராஜேந்திர குமார், பூனாவூரை சேர்ந்த பெப்பின்குமார், ஆகியோரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காங்கபூரை சேர்ந்த அஜய்குமார், ரஜிந்தர் ஆகியோரை தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் பிடித்தனர்.