டைகர் உட்ஸ் காயத்துக்கு விபத்து காரணமில்லை- மனைவி அடித்ததாக தகவல்!
கடந்த வெள்ளிக்கிழமையன்று டைகர் உட்ஸ், புளோரிடாவின் வின்டர்மியரில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே கார் விபத்தில் சிக்கினார். அவரது முகத்தில் காயம் காணப்பட்டது.
கார் விபத்தால் இந்தக் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் வேறு ஒன்று நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டைகர் உட்ஸின் மனைவி எலின் நார்டெக்ரன் தாக்கியதால்தான் உட்ஸின் முகத்தில் காயம் ஏற்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.
உட்ஸுக்கும், மனைவிக்கும் இடையே அன்று வீட்டில் பெரும் சண்டை நடந்துள்ளது. இதில் உட்ஸ் காயமடைந்துள்ளார். மனைவியிடமிருந்து தப்பி வெளியேறிய அவர் காரை எடுத்துக் கொண்டு சென்றபோது விபத்தில் சிக்கினார்.
இதை நேரில் பார்த்தவர்கள் சிலர் கூறுகையில், மிகவும் கோபத்துடன் எலின் காணப்பட்டார். அவரிடமிருந்து தப்பி வெளியே ஓடி வந்தார் உட்ஸ். ஆனால் அவரை ஒரு கோல்ப் மட்டையால் துரத்தியபடி வந்தார் எலின். இருப்பினும் தனது காரில் ஏறி விட்டார் உட்ஸ்.
அப்படியும் ஆத்திரம் தாங்காமல் காரை பலமுறை கோல்ப் மட்டையால் அடித்தார் எலின் என்கிறார்கள்.
உட்ஸுக்கும், எலினுக்கும் இடையே சண்டை மூள முக்கியக் காரணமாக கூறப்படுவது ராச்சல் உசிதல் என்ற பெண். இவருக்கும், உட்ஸுக்கும் கடந்த ஜூன் மாதம் காதல் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இதுதான் எலினை கோபப்டுத்தியுள்ளது.
இதுகுறித்து சம்பவ தினத்தன்று எலின் கேட்க, உட்ஸ் தடுமாற சண்டை மூண்டு விட்டது.
ஆனால் கார் விபத்தால்தான் காயமடைந்ததாக உட்ஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை உட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், விபத்து எனது தவறால்தான் ஏற்பட்டது. இதனால் எனக்கும், எனது குடும்பத்திற்கும் தேவையில்லாத மனக் கஷ்டம் ஏற்பட்டு விட்டது. நானும் மனிதன்தான், மற்றவர்களைப் போலவே நானும் முழுமையாக இருக்க முடியாது. இருப்பினும் இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் விபத்து குறித்துக் கூறினாரா அல்லது மறைமுகமாக ராச்சல் விவகாரத்தை விளக்கினாரா என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது.
ராச்சல் மறுப்பு..
இதற்கிடையே, தன்னை உட்ஸுடன் இணைத்துப் பேசுவதற்கு ராச்சல் உசிதல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அடுத்தவர்களின் கணவர்களைப் அபகரிக்கும் பெண் அல்ல நான் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியாகி வரும் செய்திகளுக்கு சட்ட ரீதியாக மறுப்பளிப்பதற்காக தனது லாஸ் ஏஞ்சலெஸ் வக்கீலைப் பார்க்கவும் அவர் விரைந்துள்ளார்.
ராச்சல் உசிதல், மன்ஹாட்டனில் வசித்து வருகிறார். இங்கிலாந்தின் செளதாம்ப்டனில் உள்ள பிரபல இரவு விடுதியின் விஐபி சேவையாளர் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் ஏற்கனவே விவாகரத்து ஆனவர். பின்னர் இன்னொருவரைக் காதலித்து வந்தார். நியூயார்க் இரட்டை கோபுரம் மீதான தீவிரவாதிகள் தாக்குதலி்ல் இவரது காதலர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் இவரும், உட்ஸும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதுதான் இப்போது உட்ஸ் அடி வாங்கவும்,கார் விபத்தில் சிக்கவும் காரணமாகி விட்டது.