கேள்வி கேட்டு விட்டு சபைக்கு வராத எம்.பிக்கள்- சபாநாயகர் கோபம்
டெல்லி: லோக்சபாவில் கேள்விகள் கேட்டு விட்டு சபைக்கு வராமல் இருந்த 34 எம்.பிக்கள் குறித்து சபாநாயகர் மீரா குமார் கடும் அதிருப்தி தெரிவித்தார். மேலும், லோக்சபாவும் ஒத்திவைக்கப்பட்டது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பார்லிமென்டின் இரு சபைகளுக்கும் கடந்த மூன்று நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு, நேற்று மீண்டும் கூடிய போது, உறுப்பினர்கள் வருகை மகா மந்தமாக இருந்தது.
கோரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியினர், இடதுசாரி எம்.பிக்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கூச்சல் எழுப்பினர்.
இருப்பினும் சபை நடவடிக்கைகளை தொடர்ந்தார் சபாநாயகர் மீரா குமார். அவர் கூறுகையில், கேள்வி நேரம் பார்லிமென்டின் மிகவும் முக்கியமான நேரமாக கருதப்படுவதால், அதை நான் ஒத்தி வைக்க மாட்டேன்' என்றார்.
தொடர்ந்து கேள்வி நேரத்தை நடத்தினார். அப்போது நான்கு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய அமைச்சர்கள் அளித்து முடித்தவுடன், கேள்வி கேட்ட மற்ற உறுப்பினர்கள் சபைக்கு வரவில்லை. இதையடுத்து 17 கேள்விகளை சபையில் எடுக்க முடியவில்லை.
இதனால் கேள்வி நேரம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு சபையும் ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபா வரலாற்றிலேயே கேள்வி கேட்ட உறுப்பினர்கள் வராததால், கேள்வி நேரம் கைவிடப்படுவதும், ஒத்திவைக்கப்படுவதும் இதுவே முதல் முறை.
வருண்காந்தி (பா.ஜ.க), மது கவுடு யாக்ஷி, ஏக்நாத் கெய்க்வாட், ஷிருதி சவுத்ரி, ஜான்சி லட்சுமி (அத்தனை பேரும் காங்கிரஸ்), ஆனந்த்ராவ் அட்சூல், சிவாஜி பாட்டீல் (சிவசேனா), பிரபோத் பாண்டா (இந்திய கம்யூனிஸ்ட்), ராஜிவ் ரஞ்சன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்) ஆகியோர் கேள்வி கேட்டும் வராத எம்.பிக்களில் சிலர்.
கேள்வி கேட்டும் வராத எம்.பிக்கள் குறித்து சபாநாயகர் மீரா குமார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்க சோனியா முடிவு:
இந் நிலையில் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் தவிர்க்கும் எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'திங்கள் கிழமை நடந்த விவகாரத்தை சோனியா மிக சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளார். நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்காத உறுப்பினர்களின் பட்டியலை கேட்டுள்ளார். அவர்கள் மீது கடும் நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும்.
பெரும்பாலான எம்.பி.க்கள் பிளைட் லேட், ரயில் லேட் என காரணம் கூறுகின்றனர். இந்த சாக்குபோக்குகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.