மயக்கி கற்பழித்து, படம் எடுத்து மிரட்டி தொல்லை- தேவநாதன் குறித்து பெண் வாக்குமூலம்
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் அயோக்கியத்தனமாக நடந்து கொண்ட தேவநாதன் குறித்து மேலும் பல அசிங்கச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அப்பாவி போல இருந்தார்...
அவருடன் தொடர்புடைய ஒரு பெண் போலீஸாரிடம் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,
தினமும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வேன். பயபக்தியுடன் சாமி கும்பிடுவேன். அங்கு அர்ச்சகராக இருந்த தேவநாதன் பார்ப்பதற்கு அப்பாவி போல நல்லவராக காட்சி அளித்தார். அவரிடம் என் கஷ்டங்களை சொல்லுவேன். அவரும் ஆறுதலாக பேசுவார்.
பொங்கல் கொடுத்தார்...
ஒருநாள் எனக்கு கோவில் பிரசாதம் என்று சர்க்கரை பொங்கல் கொடுத்தார். பின்னர் ஒரு சாக்லெட் கொடுத்து சாப்பிட சொன்னார்.
நானும் சாமிக்கு வைத்து பூஜை செய்தது என்று நம்பி பிரசாதத்தை சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு மயக்கமாக இருந்தது.
என்னை கோவிலின் கருவறைக்கு அர்ச்சகர் தேவநாதன் அழைத்து சென்றார். என் ஆடைகளை எல்லாம் களைந்தார். நான் தடுக்க முயன்றேன். ஆனால் மயக்கமாக இருந்ததால் என்னால் முடியவில்லை.
கற்பை சூறையாடினார்...
என்னை அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டார். அதை தனது செல்போனில் படம் பிடித்து அடிக்கடி என்னை மிரட்டி பலமுறை என் கற்பை சூறையாடினார் என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தேவநாதன் மீது கற்பழிப்பு ஒன்றையும் போலீஸார் போட்டுள்ளனர்.
எப்படி .. நடித்துக் காட்டிய தேவநாதன்...
இதற்கிடையே, தேவநாதனை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் மச்சேஸ்வரர் கோவிலுக்குக் கூட்டிச் சென்றனர்.
அங்கு கருவறைக்குள் செய்த அசிங்கச் செயல்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து தான் அசிங்கச் செயல்களில் ஈடுபட்ட இடங்கள், எங்கு செல்போனை வைத்து படமாக்கினேன் என்பது உள்ளிட்டவற்றை விளக்கினார் தேவநாதன்.
மேலும், எப்படி பெண்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டேன் என்பதையும் அவர் நடித்துக் காட்டினாராம். விசாரணையின்போது கருவறையிலிருந்து முக்கிய ஆதாரம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றினர்.
மேலும், தன் செல்போனில் பதிவு செய்த செக்ஸ் காட்சிகள் எவ்வாறு வெளியானது எனவும் தேவநாதன் விளக்கினார். காஞ்சீபுரம் கவரை தெருவில் உள்ள ஒரு செல்போன் கடையில்தான் தான் செல்போனை பழுது பார்க்கக் கொடுத்ததாகவும் அவர் அடையாளம் காட்டினார். அந்தக் கடையிலும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
தேவநாதன் பல பெண்களுடன் செக்சில் ஈடுபட்ட காட்சிகள் செல் போனில் இருந்து ஒரு லேப்-டாப் மூலம் டவுன்லோட் செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து லேப்-டாப், உயர்ரக செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை அனைத்தையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளனர்.