ஊனமுற்றோருக்கு உதவி-விஜயகாந்த் கோரிக்கை

உலக உடல் ஊனமுற்றோர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு ஊனமுற்றோருக்கு வாரியம் அமைத்தது. ஆனால், ஊனமுற்றோருக்கு முறையான சலுகைகளை போதிய அளவில் வழங்கப்படவில்லை. மாதந்தோறும் ரூ.500 உதவி வழங்குவதாக அறிவித்தார்கள். இன்னும் இந்த சலுகை முழுமையாக ஊனமுற்ற சமுதாய மக்களுக்கு சென்றடையவில்லை.
ஏனெனில் அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று அறிகிறேன். வாரிய உறுப்பினர்களுக்கு எந்தவிதமான உரிமைகளோ, அதிகாரங்களோ இல்லையென்று சமூக நலத்துறை அமைச்சர் வாரியக் கூட்டத்தில் அறிவித்தார் என்று தெரிகிறது. இது வாரியம் என்ற பெயரில் ஊனமுற்ற மக்களை ஏமாற்றுகின்ற வேலையாகும்.
அரசு வெளியூர் பேருந்துகளில் ஊனமுற்றோருக்கு மட்டுமே சலுகை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. ஆனால் ஊனமுற்றோரை அழைத்து வரும் உதவியாளருக்கும் சலுகை வழங்க வேண்டும். இந்த சலுகை ஏற்கனவே மத்திய அரசால் ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோன்று ரயில் பயணம் செய்ய விரும்பும் ஊனமுற்றோர் சமுதாய மக்கள் முன்பதிவு செய்துதான் பயணம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு அறிவித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஊனமுற்றோருக்கான உதவித் தொகை 70 சதவிகிதம் பாதிப்பு இருந்தால்தான் தரப்படுகிறது. அது 50 சதவிகிதம் பாதிப்பு இருந்தாலே தரப்பட வேண்டும். திருமண உதவித் தொகையான ரூ.20 ஆயிரத்தில், ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்கப்படுவதால் அந்த உதவித் தொகையை பயன்படுத்த முடியாமல் போகிறது.
அதற்கு பதிலாக உதவித் தொகை முழுவதுமே பண உதவியாக வழங்கப்பட வேண்டும்.
சென்னை மாவட்டத்தில் 80 பேருக்கு ஊனமுற்றோர் மோட்டார் சைக்கிள் வேண்டுமென மனு கொடுத்ததில் வெறும் நான்கு பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மனவளர்ச்சி குன்றிய 4,000 பேர் உதவி கேட்டு மனு போட்டதில் 2,000 பேருக்குத்தான் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதை மனு செய்த அனைவருக்கும் வழங்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் ஊனமுற்றோருக்கு தடையின்றி தமிழக அரசின் சலுகைகள் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
எம்ஜிஆரை இழிவுபடுத்துவதா?:
விஜய்காந்த் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கை,
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையாளராக இருந்த சுப்பிரமணிய பிள்ளை தற்கொலை செய்து கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க நீதிபதி பால் என்பவரை எம்ஜிஆர் நியமித்து உத்தரவிட்டார்.
நீதிபதி பால் விசாரித்து அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்தார். அரசின் சார்பில் சட்டப் பேரவையில் அந்த அறிக்கையை வைப்பதற்கு முன் அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி தன்னிச்சையாக அதை வெளியிட்டார். அந்த சட்டவிரோத காரியத்துக்கு யார் பொறுப்பு?.
இது தொடர்பாக அன்று பதவியில் இருந்த அமைச்சர்கள் பதவி விலகினார்களா என்று இப்போது கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் இந்த கேள்வியை அப்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்.
பால் கமிஷன் அறிக்கை திருடு போனது குறித்து இரண்டு அதிகாரிகளை தற்காலிகப் பணி நீக்கம் செய்து அன்றைய அரசு விசாரணை செய்தது. பொருளை வாங்குபவர்கள் யாரும் இல்லையென்றால் அதை யாரும் உற்பத்தி செய்ய மாட்டார்கள்.
அதே போல் தான் அன்றைக்கு பால் கமிஷன் அறிக்கையை கருணாநிதி வாங்கத் தயாராக இருந்தனாலேயே அரசு அலுவலர்களால் திருடப்பட்டது. ஆகவே இந்த குற்றத்தை செய்யத் தூண்டிய பொறுப்பு கருணாநிதிக்கு உண்டா? இல்லையா?.
எந்தக் குற்றத்திலும் குற்றம் செய்தவரைவிட குற்றம் செய்யத் தூண்டியவர் தானே முதல் குற்றவாளி.
இந் நிலையில் பால் கமிஷன் அறிக்கையை திருடிய குற்றத்துக்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு, 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி மீண்டும் பதவி வழங்கி தனது நேர்முக உதவியாளராக ஆக்கிக் கொண்டார்.
மேலும் அந்த அதிகாரிக்கு 8 ஆண்டுகள் பணியில் இல்லாத காலத்துக்கும் ஒரே நாளில் சம்பள பாக்கியை வழங்கினார் கருணாநிதி. அப்படி என்றால் இந்த குற்றத்துக்கு யார் காரணம் என்பது தெரியவில்லையா?.
இவைகள் எல்லாம் ஒரு அரசின் நிர்வாகத்தை சீர்கேடு அடையச் செய்வது மட்டுமல்லாமல், சட்ட விரோத காரியங்களை அதிகாரிகள் துணிந்து செய்வதற்கு தூண்டிவிட்டது ஆகாதா?. கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல் செய்தார் என்று நீதிபதி சர்க்காரியா அறிக்கை தாக்கல் செய்தார்.
ஆனால் அந்த அறிக்கையின் அடிப்படையில் கருணாநிதியை கைது செய்ய வேண்டாம் என்று அன்றைய தினம் எம்ஜிஆர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்.
ஆனால் பால் கமிஷன் தொடர்பாக அன்றைய முதல்வர் எம்ஜிஆர் ஏன் பதவி விலகவில்லை என்று இன்று கருணாநிதி கேள்வி கேட்டு அவரை கொச்சைப்படுத்துகிறார் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications