புலிகளிடமிருந்து தமிழர்கள், முஸ்லீம்களை மீட்டவன் நானே - பொன்சேகா
கொழும்பு: வட, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவன் நானே. புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த தளபதி நானே. எனது தலைமையிலான ராணுவப் படையணியே களத்தில் இறங்கிச் செயற்பட்டு நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்று சொல்கிறார் பொன்சேகா.
இலங்கை அதிபர் தேர்தலில் பொன்சேகாவை களத்தில் இறக்கி ராஜபக்சேவை விரட்ட எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளன.
ஆனால் இத் தேர்தலி்ல இருவருக்குமே வாக்களிக்கும் மன நிலையி்ல், வாழ வழியில்லாமல் பரிதவிக்கும் தமிழர்கள் இல்லை.
இந்த நிலையில் தமிழர்களின் வாக்குகளைக் கவர எவ்வளவு இறங்கிப் போக முடியுமோ அவ்வளவுக்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள் சிங்களர்களான ராஜபக்சேவும், பொன்சேகாவும்.
ராஜபக்சேவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களைக் கொன்று குவித்த பொன்சேகா இன்று திடீர் ஞானோதயம் பெற்று தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறார். புத்தரை விட படு வேகமாக இவருக்கு ஞானோதயம் பிறந்ததுதான் பெரும் வியப்பாக உள்ளது.
நான் ஒரு சிங்களன்..
பிபிசிக்கு பொன்சேகா அளித்துள்ள ஒரு பேட்டியில்,
நான் ஒரு உண்மையான சிங்களவன். மார்க்கப்பற்றுடைய பௌத்த சமயத்தவன். ராணுவத் தளபதியாகப் பதவி வகித்தவன். கட்டுக்கோப்பான ஒழுக்கநெறி முறைமைகளைப் பின்பற்றுபவன். வாக்குறுதி தவறாதவன். வாக்களித்தபடி புலிகளுடனான போரில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவன்.
எனது காலத்திலேயே போரை முடித்து வைத்தேன். இப்படிப்பட்ட என்னால் இலங்கையின் நற்பெயருக்கு சர்வதேச மட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கும் களங்கங்களை நிச்சயமாக இல்லாமற் செய்ய முடியும்.
இலங்கை குறித்த சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயத்தை என்னால் நிச்சயம் மாற்றியமைக்க முடியும். மாற்றிக் காட்டுவேன். குறிப்பாக கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் போதல்கள் என்பன குறித்து நீதியான, பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வேன் (இந்த விசாரணைகளை முழுமையாக, சுதந்திரமாக நடத்தினால் பொன்சேகா தளபதியாக இருந்த ராணுவம்தான் பெரும் சிக்கலில் மாட்டும் என்பது குறிப்பிடத்தக்கது).
நாட்டில் புரையோடிக் காணப்படும் படுகொலைகள், காணாமல் போதல்கள், மிரட்டல்கள், பாதாள உலகக் கோஷ்டியினரின் செயற்பாடுகள், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் உட்பட சட்டவிரோத செயற்பாடுகளை இல்லாமற் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அர்த்த புஷ்டியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
நாட்டில் சுதந்திரமே இல்லை...
இன்று இந்நாட்டில் மக்களுக்கு நடமாடும் சுதந்திரம் இல்லை. கருத்து வெளியிடும் சுதந்திரமோ, பேச்சுச் சுதந்திரமோ, ஊடக சுதந்திரமோ இந்நாட்டில் இல்லை. ஒழுங்கான நீதித்துறை இல்லை.
மக்கள் எதிர்கொள்ளும் இவை போன்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பு அரசின் உடையது. ஆனால் இப்பிரச்சினைகளையும், இப்பிரச்சினைகளால் மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் தீர்த்து வைக்க அரசு எவ்விதமான உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்கவே இல்லை. ஆனால் இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க என்னால் முடியும். நாட்டில் சட்டம், ஒழுங்கு, நீதி ஆகியன அவசியம். அதை நிலைநாட்ட என்னால் முடியும்.
இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றங்கள் குறித்து உள்நாட்டின் சட்ட திட்டத்துக்கு அமைய கட்டாயம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளிவரும். சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் இல்லாமற் போகும். ஆனால் வெளிநாடுகள் இங்குவந்து விசாரணை நடத்த முடியாது.
இருப்பினும் ஐ.நா. சபை, சர்வதேச நாடுகள் நேச நாடுகள் ஆகியன யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அவர்களின் சந்தேகங்கள், சர்ச்சைக்குரிய விடயங்கள் ஆகியனவற்றை எங்களுக்கு வெளிப்படுத்தி நாம் இவ்விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி செய்ய முடியும்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவன் நானே. புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த தளபதி நானே. எனது தலைமையிலான ராணுவப் படையணியே களத்தில் இறங்கிச் செயற்பட்டு நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது. எனவேதான், இந்த வெற்றி ராணுவத்தின் உடையது என்று நான் அடித்துக் கூறுகிறேன்.
தமிழர்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும்...
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் விரும்புகின்ற இடங்களுக்கு சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்படவேண்டும். உறவினர்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆனால் பொதுமக்கள் நாட்டின் பாதுகாப்புக்கு கட்டாயம் ஒத்துழைப்பு வழங்கவேண்டி உள்ளது. ஏனெனில், மறைந்திருக்கும் புலிகளைக் கண்டுபிடிக்க வேண்டி உள்ளது என்றார் பொன்சேகா.












Click it and Unblock the Notifications