போலீஸ் -வக்கீல் மோதல்: 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய தடை
டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வக்கீல்கள், போலீஸ் மோதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தடியடிக்கு காரணமான அப்போதைய கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் ராமசுப்பிரமணி, பூக்கடை துணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகிய 4 அதிகாரிளையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அதேபோல விஸ்வநாதன் தவிர்த்து மற்ற 3 அதிகாரிகளும் அப்பீல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகிய நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் நேற்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
முன்னதாக காவல்துறை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் சோலி சோரப்ஜி, வாகனாவதி, அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதிடுகையில், வக்கீல்களின் அத்துமீறல் காரணமாகவே போலீசாரால் தடியடி நடத்தப்பட்டது.
இந்த பிரச்சினையில் ஒரு சாராருக்கு எதிரான உத்தரவை நடைமுறை படுத்தக்கூடாது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கோரினர்.
இந்த நடவடிக்கைக்கு மட்டும் இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு மனுவுக்கு தடை விதிக்க மறுபப்ு தெரிவித்து விட்டது.
பின்னர் இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு, தலைமை செயலாளர் மற்றும் வக்கீல்கள் சங்கத்துக்கு நோட்ஸ் அனுப்பவும் பெஞ்ச் உத்தரவிட்டது.