'சாக்கடை சுத்தமாக இல்லை என்று கூட போராட்டம்'
திருச்செந்தூர்: முதல்வர் கருணாநிதியைப் போல திட்டமிட்டுச் செயல்படும் ஒரு முதல்வரை எனது வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்ததே இல்லை என்று வியப்பு தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் அன்பழகன்.
திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து உடன்குடி பாரதியார் திடலில் நடந்த கூட்டத்தில் அன்பழகன் பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவும் இதில் பங்கேற்றார். அன்பழகன் பேசுகையில்,
திமுக வேட்பாளராக போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணன், ஏற்கனவே அதிமுகவில் இடம்பெற்று, அந்த கட்சியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தவர்தான்.
ஆனால் அவர், அந்த கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவரை யார் தேர்ந்து எடுத்தார்களோ அவர்களுக்கு தொண்டாற்ற முடியாமல் அந்த கட்சி தலைமை அவரை தடுத்து விட்டது.
இந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்றால், அதில் 2 அம்சங்கள் உள்ளன. ஒன்று அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து வெளியே வந்தது நியாயம். மற்றொன்று அவர் திமுகவில் சேர்ந்தது நியாயம் என்பதாகும்.
நான் எனது அரசியல் வாழ்க்கையில் பார்த்த வரையில் முதல்வர் கருணாநிதியைபோல் திட்டமிட்டு செயல்படும் முதல்வரை கண்டது இல்லை. மற்ற கட்சிகளில்கூட அப்படிப்பட்ட ஒருவர் கிடையாது.
இதனால்தான் அவர் மத்திய அரசினால் மதிக்கப்படுகிறார். அவர் எழுப்பும் குரல் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட மசோதா மீனவர்களால் கடுமையாக எதிர்க்கப்படுவதாக உள்ளது என்று கடந்த மாதம் 19-ந்தேதி மத்திய மந்திரி சரத் பவாருக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். அதுமட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை நேரில் அனுப்பி விளக்கவும் செய்தார். அதன்பிறகு அந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால் இப்போது அதுதொடர்பாக போராடுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவருக்கு ஏதாவது போராட்டம் நடத்திக் கொண்டு இருக்க வேண்டும். ஒன்றும் இல்லாவிட்டால் உடன்குடியில் ஓடும் சாக்கடை சுத்தமாக இல்லை என்று கூட போராட்டம் நடத்துவார் என்றார் அன்பழகன்.