29ம் தேதி தமிழக பாஜக தலைவர் தேர்தல்
சென்னை: தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு வருகிற 29ம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மூன்றாண்டுக்கு ஒரு முறை முறையாக அமைப்பு தேர்தல்களை நடத்துகின்ற ஒரே தேசிய கட்சி பாரதீய ஜனதா கட்சி தான். இந்த தேர்தல் பருவத்தில் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்ப்பு இயக்கமானது, கட்சியின் ஸ்தாபகர் சியாம பிரசாத் முகர்ஜி பிறந்த தினமான ஜூலை 6ம் தேதி துவங்கியது.
ஏற்கனவே உறுப்பினராக உள்ளோர் மீண்டும் தங்களை ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மற்றும் புதிதாக சேர விரும்புவோரையும் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் துவக்கப்பட்ட இப்பணியானது அக்டோபர் 31ம் தேதியுடன் நிறைவுற்றது.
சேர்க்கப்பட்ட உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டு கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2009 முதல் 2012 வரை மூன்று ஆண்டுகளுக்குரிய அமைப்பு பருவத்திற்கான தேர்தல் தற்போது நடந்து வருகிறது.
கட்சியின் அடிப்படை அமைப்பான கிளைக் கமிட்டிகளுக்கான தேர்தல்கள் 10 ந் தேதியுடன் நிறைவுற்றுள்ளது. இதற்கு அடுத்த படியாக ஒன்றிய, நகர கமிட்டிகளுக்கான தேர்தல் தற்போது நடைபெறுகிறது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் டிசம்பர்
25க்குள் நடத்தி முடிக்கப்படும்.
தமிழ்நாடு மாநிலத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மாநில பொதுக்குழு சென்னையில் டிசம்பர் 29, 30 தேதிகளில் நடைபெறும்.
புதிய மாநிலத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது, தமிழகத்திலிருந்து 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். இத்தேர்தலை நடத்துவதற்காக தேசிய அளவிலிருந்து ஒரு தேர்தல் பார்வையாளர் வருகை தருவார்.
டிசம்பர் 29 முற்பகல் மாநில நிர்வாகிகள் சந்திப்பும், பிற்பகல் மாநில செயற்குழு கூட்டமும் நடைபெறும். மறுநாள் டிசம்பர் 30ம் தேதியன்று முதல் நாள் கலந்து கொண்ட பிரதிநிதிகளுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.
அமைப்பு தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநிலத்தேர்தல் அதிகாரி ராமலிங்கம் கவனித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications