குப்பைத் தொட்டியில் வீச வேண்டிய மசோதா-வைகோ
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஜனநாயகத்துக்கு எதிரான, மனித உரிமைகளுக்கு எதிரான, அடக்குமுறை மசோதாக்கள், பல கால கட்டங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றில், தற்போது மத்திய அரசு, உத்தேசித்துள்ள மீன்பிடித் தொழில் மசோதாவைப் போன்ற, கொடூரமான தீங்கு விளைவிக்கும், மசோதா இதுவரை, முன் வைக்கப்பட்டது இல்லை. இந்த மசோதாவின் ஒவ்வொரு வரியும், வார்த்தையும், கோடிக்கணக்கான மீனவ மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும், அடியோடு நாசமாக்குகின்ற, மீனவ மக்களை, வதைத்து, நசுக்குகின்ற மசோதா ஆகும்.
எந்த வகை வலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் மீனவர்களுக்கு உரிமை கிடையாது. கடலுக்கு உள்ளே, மீன்வளம் காண்பதற்குக்கூட, மீனவர்கள் ஆய்வு செய்ய அனுமதிக்கவும் தடை என்று இம்மசோதா விஷத்தைக் கக்குகிறது.
இது, குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட வேண்டிய மசோதா ஆகும்.
கோடிக்கணக்கான மக்களை, மனிதர்களாகக் கூட எண்ணிப் பார்க்காமல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்து வந்த வாழ்வு உரிமையைக் காலில் போட்டு மிதித்து விட்டு, பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளைக்கு ஆதரவாக இந்த மசோதாவை கொண்டுவர முற்பட்ட குற்றத்திற்கு மத்திய அரசு பொறுப்பாளி என்பதால் அதில் அங்கம் வகிக்கும் திமுகவும் பொறுப்பேற்க வேண்டும்.
மீனவ மக்களை ஏமாற்றுவதற்காக மத்திய அமைச்சர் சரத் பவார் இது பற்றி சொன்ன அபத்தமான கருத்துக்களை கருணாநிதி அறிக்கையாக தந்துள்ளார். இந்த மசோதாவை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி ஏன் தொடக்கத்திலேயே மத்திய அரசை வலியுறுத்தவில்லை?.
இந்த மசோதாவில் விவாதிப்பதற்கோ ஆலோசிப்பதற்கோ எந்த ஒரு பிரிவையும் ஏற்பதற்கோ தகுதியே கிடையாது. இடைத் தேர்தலை மனதில் கருதி மீனவ மக்களை ஏமாற்றுவதற்காகவே முதல்வர் இப்படி அறிக்கை தந்துள்ளார்.
மத்திய அரசை கண்டித்து வரும் 18ம் தேதி டெல்லியில் அதிமுக நடத்த உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும். அதில் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி கலந்து கொள்வார் என்று கூறியுள்ளார் வைகோ.