அழகுபடுத்தப்பட்ட மெரீனா கடற்கரை - திறந்து வைத்தார் கருணாநிதி
சென்னை: கிட்டத்தட்ட ரூ. 26 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ள சென்னை மெரீனா கடற்கரையை முதல்வர் கருணாநிதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்தார்.சென்னை நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மெரீனா கடற்கரை. உலகின் மீக நீளமான கடற்கரைகளில் ஒன்று.
இந்த கடற்கரையை உலகத் தரத்திற்கு உயர்த்தி, அழகுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டு ரூ. 2.92 கோடியை ஒதுக்கியது.
கடந்த ஆண்டு பி்ப்ரவரி மாதம் இந்த அழகுபடுத்தும் பணிகள் தொடங்கின. நேப்பியர் பாலத்திலிருந்து காமராஜர் சாலையில் உள்ள கலங்கரை விளக்கம் வரை கிட்டத்தட்ட 3.1 கிலோமீட்டர் தொலைவுக்கு கடற்கரை அழகுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன.
கருங்கல் நடைபாதை, நடைபாதை ஓரம் அழகிய, கண்ணை கவரும் தூண்கள், துருப்பிடிக்காத ஸ்டீல் பைப்புகள், பொது மக்கள் உட்கார்ந்து ஓய்வு எடுப்பதற்காகவும், கடற் கரையின் அழகை ரசிக்கவும் 14 இடங்களில் வண்ண வண்ண கருங்கற்கள், கிரானைட் கற்கள் கொண்டு கடற்கரையை பார்த்த வண்ணம் உட்காரும் வகையில் நவீன இருக்கைகள், பூங்காக்கள், நீரூற்றுகள் என அட்டகாசமாக பொலிவாகியுள்ளது மெரீனா கடற்கரை.
கடற்கரைக்கு வரும் மக்கள் வசதிக்காக நவீன பொதுக் கழிப்பிடங்கள் நான்கு இடங்களில் அமைந்துள்ளன.
கண்ணகி சிலை அருகே நவீன முறையில் நடைபாதையும், சுரங்கப்பாதையும், கடற்கரையை சுற்றிலும் கண்கவரும் வகையில் பறவை வடிவிலான மின் விளக்குகளும் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. காந்தி சிலை அருகில் அழகிய நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரவில் பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்காக நீர் வீழ்ச்சிகளுக்கு இடையில் வண்ண விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையைச்சுற்றி நவீன வசதிகளுடன் பஸ் நிறுத்தங்கள், வாகனங்களை நிறுத்துவதற்காக நவீன கார் நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
புதுப் பெண் போல ஜொலி ஜொலிக்கும், அழகுபடுத்தப்பட்ட மெரீனா கடற்கரையை முதல்வர் கருணாநிதி இன்று காலை திறந்து வைத்தார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.