சென்னையில் பெங்களூர் பெண் கொலை-ஏன்?
சென்னை: காதலிப்பது போல நடித்து என்னை ஏமாற்றியதால் நடன அழகி அஸ்மாவைக் கொலை செய்ததாக பிடிபட்டுள்ள அவரது காதலர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த 30 வயதான அஸ்மா பார்களி்ல் நடனமாடி வந்தார். கணவரை விட்டுப் பிரிந்து, புதுக்கோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மணந்து அவருடன் வாழ்ந்து வந்தார். இந்தத் தொழிலதிபர் ஏற்கனவே திருமணமானவர்.
அவர் புதுக்கோட்டையில் குடும்பத்தை தங்க வைத்து விட்டு பெங்களூரில் அஸ்மாவுடன் வாழ்ந்து வந்தார்.
அஸ்மாவின் தோழி அனு. இவரும் ஏற்கனவே கல்யாணமாகி, அவரை விட்டுப் பிரிந்து சென்னை ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வரும் ஒருவரை மணந்து அவருடன் சென்னையில் குடித்தனம் நடத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை தொழிலதிபர் அஸ்மாவுடன் சென்னை வந்தார். வந்தவர், அனு வீட்டில் அஸ்மாவை தங்க வைத்து விட்டுச் சென்றார். இந் நிலையில் அஸ்மா மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.
இதையடுத்து போலீஸார் அனு மற்றும் அவரது கணவர் ரஞ்சித்தை கைது செய்தனர். விசாரணையில் அஸ்மாவின் காதலரான கிரிதாஸ் என்பவர்தான் இந்தக் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கொல்கத்தாவுக்கு தப்பிச் சென்றுவிட்ட கிரிதாஸை சென்னையிலிருந்து சென்ற தனிப்படை போலீஸார் கைது செய்து அழைத்து வந்தனர்.
கிரிதாஸ் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,
எனது சொந்த ஊர் கேரள மாநிலம். நான் சென்னையில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். அப்போது ரஞ்சித் எனக்கு நண்பர் ஆனார். அவரது வீட்டுக்கு செல்லும் அளவுக்கு எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இதனால் நான் ரஞ்சித்தின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவேன்.
ரஞ்சித்தின் மனைவி அனுவின் தோழி அஸ்மா. இவர் பெங்களூரில் இருந்து அடிக்கடி சென்னைக்கு வருவார். அப்போது அனுவின் வீட்டில்தான் தங்குவார்.
இந்த நேரத்தில் தான் அஸ்மாவுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. அவரும் என்னை விரும்பினார். கடந்த ஓரண்டாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம்.
இந்நிலையில் திடீரென அஸ்மா, பெங்களூர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் சென்னை வரும்போது இதுபற்றி கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
கடந்த வாரம் சென்னை வந்திருந்த அஸ்மா நான் நினைத்தது போலவே, ரஞ்சித்தின் வீட்டில் தங்கினார். நான் அங்கு சென்று அஸ்மாவிடம் இதுபற்றி கேட்டேன். அப்போது அவர் திமிராக பேசினார். என்னை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நீ ஒன்றும் பெரிய ஆள் இல்லை. இதுபற்றி இனி மேல் பேசாதே என்று அஸ்மா கூறினார்.
இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அஸ்மாவுடன் சண்டை போட்டேன். அப்போது ஏற்பட்ட தகராறில் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டேன். என்னையும் அறியாமல் இது நடந்து விட்டது.
இதுபற்றி ரஞ்சித்திடமும், அனுவிடமும் சொல்லி அழுதேன். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்று தலை மறைவாகி விட்டேன் என்று கூறியுள்ளார் கிரிதாஸ்.












Click it and Unblock the Notifications