சோமாலிய கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2 தமிழர்கள் விடுதலை
தூத்துக்குடி: சோமாலியா கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தூத்துக்குடி மற்றும் சுரண்டை வாலிபர்கள் 113 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் தமிழம் திரும்பவுள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி ரஷ்யாவில் இருந்து கென்யாவுக்கு கோதுமை ஏற்றிக் கொண்டு அல் காலித் என்ற கப்பல் புறப்பட்டது. இக்கப்பல் இந்திய பெருங்கடலில் சென்றபோது சோமாலியா கடல் கொள்ளையர்கள் கப்பலை அதிலிருந்த 26 மாலுமிகளுடன் கடத்தினர்.
இதில் 24 பேர் இந்தியர்கள். 2 பேர் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களை விடுவிக்க சோமாலியா கொள்ளையர்கள் ரூ.100 கோடி வரை பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட 24 இந்தியர்களில் தூத்துக்குடியை சேர்ந்த வீரமோகன் மகன் விஜயகணேஷ், சுரண்டையை அடுத்துள்ள வேப்பநாடானூர் சேர்மன் மகன் மாணிக்கம் ஆகிய இருவரும் அடங்குவர்.
கடத்தப்பட்ட அனைவரையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மூலம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டன. இதற்கிடையே அல் காலித் கப்பல் நிறுவனமும் கடற்கொள்ளையர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது.
இதில் கொள்ளையர்களுக்கும், கப்பல் நிறுவனத்திற்கும் சுமூக உடன்பாடு ஏற்பட்டு நேற்று முன்தினம் மாலை 26 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனால் 113 நாட்களாக நீடித்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.
விடுவிக்கப்பட்ட தூத்துக்குடி விஜயகணேஷ், சுரண்டை மாணிக்கம் ஆகியோரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இன்னும் 5 நாட்களில் அவர்கள் மும்பை வழியாக தமிழகம் திரும்புவார்கள் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications