ஆஸ்திரேலியாவில் இந்திய தம்பதியின் 3 வயது குழந்தை கொலை

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்ததால் அது இருநாடுகளுக்கு இடையேயான உறவை பாதித்தது.
இதை தொடர்ந்து இத்தகைய வன்முறை கலாசாரங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை ஆஸி அரசு எடுத்து வருகிறது.
இந்தியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுப்பதற்காக, யாராவது கத்தியுடன் தெருவில் நடமாடினால் அவர்களுக்கு ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று விக்டோரியா மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
தெருக்களில் நடமாடுபவர்களிடம் அவர்கள் கத்தி வைத்து இருக்கிறார்களா என்று சோதனையிட போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மைனர்கள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வாங்கவும் தடை செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நேற்று இந்தியா வந்த ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஸ்டீபன் ஸ்மித், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதலை ஒடுக்க தனது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விவரித்தார்.
மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், எஸ்.எம்.கிருஷ்ணா, கபில் சிபல், வயலார் ரவி ஆகியோரையும் ஸ்டீபன் ஸ்மித் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்திய தம்பதியின் 3 வயது குழந்தை மெல்போர்ன் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் புறநகர் பகுதியான லலூர் என்ற இடத்தில் வசித்து வரும் பெண் ஹர்பிரீத் கவுர். இந்தியாவை சேர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் படித்து வருகிறார்.
இவரது கணவர் பெயர் ஹர்ஜித் சிங். இவர்களுக்கு குர்ஷான் சிங் என்ற 3 வயது மகன் உள்ளார். இந்த சிறுவன், மெல்போர்ன் நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று சாலையோரம் புல்வெளியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவனது உடல் துணியில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சிறுவனின் தந்தை போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுவன் குர்ஷான் சிங், புதன்கிழமை காணாமல் போனான். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில்தான் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறுவனின் உடலில் எந்தக் காயமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் குழந்தை எப்படிக் கொல்லப்பட்டது என்பது புதிராக உள்ளது.
இருப்பினும் இதை கொலை வழக்காகவே பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது இனவெறித் தாக்குதலா அல்லது தெரிந்தவர்களே கொலை செய்தனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரணை நடந்து வருவதாக விக்டோரியா மாகாண முதல்வர் ஜான் பிரம்பி தெரிவித்துள்ளார்.
பிரதமர் கெவின் ரூட் கண்டனம்...
இந்த சம்பவம் குறித்து பிரதமர் கெவின் ரூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மன்னிக்க முடியாத செயல். இதில் ஈடுபட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவர்.
ராஜ்யசபாவில் கவலை...
இதற்கிடையே சிறுவன் குர்ஷான் சிங் கொல்லப்பட்ட சம்பவம் ராஜ்யசபாவில் இன்று எதிரொலித்தது.
பாஜக உறுப்பினர் வெங்கையா நாயுடு பேசுகையில், ஆஸ்திரேலியாவில் இந்திய சிறுவன் கொல்லப்பட்டது குறித்து அவையில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு துணை சபாநாயகர் ரஹ்மான் கான் அனுமதி தர மறுத்தார்.
இதனையடுத்து வெங்கய்யா நாயுடு இந்த சம்பவத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பதிலளிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து எழுந்த வெளியுறவுத்துரை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, குழந்தையின் படுகொலைக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கிருஷ்ணா, படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை ஆஸ்திரேலிய அரசிடம் இருந்து இந்த படுகொலை சம்பவம் குறித்து முழு தகவல் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய போலீசார் விரைவில் குற்றவாளியை கண்டு பிடிப்பர் என நம்புவதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications