மாயாவதி குறித்த அமளியுடன் முடிவடைந்தது லோக்சபா தொடர் - மீண்டும் ஏப். 12ல் கூடுகிறது
டெல்லி: லோக்சபா பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று மாயாவதி தொடர்பாக ஏற்பட்ட அமளி, துமளியுடன் முடிவடைந்து ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் வெள்ளி விழாவும், கட்சியின் நிறுவனர் தலைவர் மறைந்த கன்ஷிராமின் பிறந்த நாள் விழாவும் உ.பி.யில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி தலைநகர் லக்னோவில் பிரமாண்ட பேரணியும், மாபெரும் பொதுக் கூட்டமும் நடந்தது. கூட்டத்தில் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி பங்கேற்றார். அப்போது அவருக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட மாலையை அவரது ஆதரவாளர்கள் அணிவித்து மகிழ்ந்தனர். அரசு சார்பில் ரூ.200 கோடி செலவில் இந்த விழா நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மக்களவையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ், சமாஜ்வாடிக் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். பதிலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பியதால் அமளி ஏற்பட்டு 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது அமளி நீடித்தது. இதையடுத்து ஏப்ரல் 12ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து வெளியேறினார் சபாநாயகர் மீரா குமார்.