நியாயமாக தேர்தல் நடந்தால் அதிமுக தான் வெல்லும்-வைகோ

ஊட்டி செல்லும் வழியில் கோவை வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
பென்னாகரத்தில் ஆளும் கட்சியான திமுக பல்வேறு முறைகேடுகளை செய்து வருகிறது. ஜனநாயகத்தை மறந்து ஓட்டுக்கு முதல் கட்டமாக ஆயிரம் ரூபாயும், 2வது கட்டமாக ஆயிரம் ரூபாயும் கொடுத்துள்ளார்கள். 3வது கட்டமாக பணம் கொடுக்க தயாராகி வருகிறார்கள்.
இதுவரை இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வராத திமுக தலைவர் தோல்வி பயம் காரணமாக முதன்முதலாக பென்னாகரம் கூட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
அப்பாவி அதிமுகவினரைப் பிடித்து பணம் கொடுக்க முயன்றதாக பொய்வழக்கு போடுகின்றனர். இதே நிலை நீடித்தால் தேர்தல் நியாயமாக நடக்குமோ என்றே எண்ண தோன்றுகிறது.
தேர்தல் நியாமாக நடக்குமானால் பென்னாகரத்தில் அதிமுக வேட்பாளர் தான் வெற்றி பெறுவார். அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிகள் மேல் மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கை இருக்கிறது.
நானும் 3 நாட்கள் அங்கு பிரசாரம் மேற்கொண்டேன். மக்களிடம் பெரும் எழுச்சியை காண முடிந்தது.
பிரபாகரனும், பொட்டு அம்மானும் உயிரோடு இருக்கிறார்கள். ஆனால், இலங்கை அரசு பொய்யான ஆவணங்களையும், போலியான சான்றிதழ்களையும் காட்டியது. உடல்களை உடனடியாக எரித்து விட்டதாகவும் கூறியது.
ஐ.நா. தலையிட்ட பின்னரும் ராஜபக்சே மனித உரிமைகளை மீறி இனப் படுகொலை செய்து வருகிறார். அந்த இலங்கை அரசுக்கு உதவுகிறது இந்திய அரசு.
அப்படிப்பட்ட அரசில் இருக்கும் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் தமிழக சட்டமன்றத்திலே நுழைய தகுதி இல்லாதவர்கள் என்றார் வைகோ.
மதிமுக to திமுக to மதிமுக:
அப்போது திமுக கவுன்சிலர் ராஜேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகி வைகோ முன்னிலையில் மதிமுகவில் சேர்ந்தார்.
ராஜேந்திரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் மதிமுகவில் இணைந்துள்ளார்.
புண்ணியம் தானாக வரும்:
முன்னதாக நேற்று பாப்பாரப்பட்டியில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து வைகோ பேசுகையில்,
'பென்னாகரம் தொகுதி முழுக்க காவல்துறை பாதுகாப்போடு ஆளுங்கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாக சென்று பண வினியோகத்தை முடித்து விட்டனர். அடுத்தகட்ட பண வினியோகத்திற்கும் தயாராகி வருகின்றனர்.
நான் மக்களை குறை சொல்ல மாட்டேன். காரணம், ஏழைகளுக்கு ஆயிரம் செலவுகள் இருக்கும். மக்களை, வறுமையும், வேதனையும் வாட்டி எடுக்கும்போது, வீடு தேடி வரும் பணத்தை வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும்.
நீங்கள், கை நீட்டி வாங்கிய பணத்திற்கு நன்றி உணர்வு காட்ட வேண்டாம். அதை எதிர்த்து ஓட்டு போட்டாலே உங்களுக்கு புண்ணியம் தானாக வரும் என்றார்.












Click it and Unblock the Notifications