சுவிடசர்லாந்து கல்யாணத்தில் தமிழர்கள் அடிதடி- போலீஸ் அடக்கியது
ஜெனீவா சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நடந்த தமிழர் கல்யாணம் ஒன்றில் அடிதடி ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்து அவர்களை கலைத்து விட்டு மோதலை அடக்கினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்திலுள்ள அரோ மாநிலத்தில் தமிழ் திருமண வைபவம் ஒன்று நடந்தது. அப்போது குடும்பத் தகராறு காரணமாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் மூண்டது.
ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல மாறிப் போனது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் தெரிந்து விரைந்து வந்த போலீஸார் உள்ளே புகுந்து மோதலை அடக்கினர். பலரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் ஒரு ஆணைத் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
வடக்கு மாகாணத்தில் மிகவும் பிரபலமான ஒரு குடும்பத்தின் திருமணம் இது. கல்யாணத்தின்போது ஏற்பட்ட மோதலில் குத்து விளக்கு உள்ளிட்டவற்றைக் கொண்டும் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த பலர் ரத்தக் காயமடைந்ததால் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் மருத்துவமனையிலிருந்து திரும்பி விட்டனர்.
இந்தக் கல்யாணக் கலாட்டா சுவிட்சர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டதாம்.
இது சாதாரண கல்யாணச் சண்டை என்றாலும் கூட சுவிட்சர்லாந்தில் இதுபோல நடப்பது புதிது என்பதால் பரபரப்பாகி விட்டது.