ஒபாமாவின் ஃபேஸ்புக்கில் அத்துமீறிய 'ஹாக்கர்' பிரான்சில் கைது
பாரிஸ்: அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளிட்டோரின் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் அத்துமீறி நுழைந்து தவறான தகவல்கள் வெளியிட்ட 25 வயது வாலிபர் பிரான்சில் பிடிபட்டார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட பல்வேறு பிரபலங்களின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புகளில் மர்ம ஆசாமிகள் அத்துமீறி நுழைவதாக கடந்த பல மாதங்களாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதுகுறித்து அமெரிக்க எஃப்பிஐ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பிரான்சில் உள்ள ஒருவர் ஒபாமாவின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் அக்கவுன்ட்டுக்குள் நுழைந்து தகவல்களை அழிப்பதும், தேவையற்ற தகவல்களை சேர்ப்பதுமாக அமளி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
'பாஸ்வேர்ட் கெஸ்ஸிங் புரோகிராம்'ஐ பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் பிரபலங்களில் வலையமைப்புகளில் அத்துமிறுவது தெரியவந்தது.
இதையடுத்து பிரான்ஸில் உள்ள சைபர் போலீசாரை எஃப்பிஐ உஷார்படுத்தியது. இந்நிலையில் பாரிஸ் அருகே பை-டி-டோம் பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபரை பிரான்ஸ் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயரை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் பணத்துக்காகவோ வேறு தீய நோக்கத்துக்காக இந்த 'ஹாக்கிங்' வேலையில் ஈடுபடவில்லை எனத் தெரிகிறது.
தன்னுடைய 'ஹாக்கிங்' திறமையை வெளிப்படுத்து காஷூவலாக இந்த குற்றத்தை செய்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications