ஓவியர் எம்.எப். ஹூசேன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்

இந்து தெய்வங்களை நிர்வாண கோலத்தில் வரைந்ததால் பெரும் சர்ச்சையில் சிக்கினார் ஹூசேன். அவர் மீது 12க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு கோர்ட்களில் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார். சமீபத்தில் அவர் கத்தார் நாட்டுக் குடியுரிமையை பெற்றார். தனது இந்திய பாஸ்போர்ட்டையும் திரும்ப ஒப்படைத்து விட்டார்.
இந்த நிலையில், ஹூசேன் மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
வழக்கை விசாரித்த பெஞ்ச், தற்போது தோஹாவில்தானே இருக்கிறார் ஹூசேன். அவருக்கு இதனால் என்ன பிரச்சினை வந்து விட்டது என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், ஹூசேன மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு மத்திய அரசுக்கோ பிறருக்கோ உத்தரவிட முடியாது. காரணம், இந்த வழக்குகள் அனைத்தும் தனி நபர்களால் போடப்பட்டவையாகும். எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில பாந்தர்ஸ் கட்சி தலைவர் பீம் சிங் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
தனது மனுவில், ஹூசேனை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார் பீம் சிங்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு வெளியே வசித்து வருகிறார் ஹூசேன் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications