பென்னாகரம்: தினசரி ரூ. 2.5 லட்சம் 'கல்லா கட்டிய' டாஸ்மாக் கடைகள்
பென்னாகரம்: தேர்தல் திருவிழாவில் அமோகமாக 'கல்லா கட்டும்' கடைகளில் முக்கியமானது மதுக்கடை. அதிலும் இடைத்தேர்தல் திருவிழா கூடுதல் கோலாகலத்துடன் நடப்பது வழக்கம்.
பென்னாகரம் இடைத்தேர்தல் களத்தில் நேற்று மாலை வரை ஏராளமான கட்சித் தொண்டர்கள் எவ்வித கட்டுப்பாடுகளம் இன்றி தொகுதியில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை ஆற்றி வந்தனர்.
எல்லா கட்சிகளும் தங்கள் தொண்டர்கள் கட்சிப் பணி செய்வதற்கும், ஆதரவான வாக்காளர்கள் தங்களுக்கே ஓட்டு போட்டு ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்கும் மது வகைகள் வாங்கித் தருவதை குறைவின்றி தாராளமாக செய்தது.
இதன் பலனாக கடந்த சில தினங்களாக ஒருநாளைக்கு ரூ.2.5 லட்சம் வரை விற்பனை நடந்து வருவதாக ஒகேனக்கல்லில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையின் கண்காணிப்பாளர் திருப்பதி கூறுகிறார்.
பென்னாகரத்தில் கடந்த இரண்டு வாரங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு மது விற்பனை அதிகளவில் இருந்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் வரும் 27ம் தேதி இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் விற்பனை இல்லாமல் ஏற்படக்கூடிய இழப்பு, கடந்த சில நாட்களில் கிடைத்த கூடுதல் வருவாய் மூலம் மிகுதியாகவே ஈடுகட்டப்படும் என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications