எம்.ஜி.ஆர். காலத்திலேயே 2 முறை டெபாசிட் இழந்துள்ளது அதிமு – ஜெ.
பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததை தாங்க முடியாமல் ஈரோடைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
ஈரோடு அருகே வார்டு அதிமுக செயற்குழு உறுப்பினராக இருந்த இவர் கடந்த 30ம் தேதி பென்னாகரம் தேர்தல் முடிவை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது அதிர்ச்சி அடைந்து, உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தீக்குளித்த தங்கவேலை பார்க்க இன்று ஈரோடு வந்தார். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மருத்துவமனைக்குச் சென்று தங்கவேலுவை சந்தித்து நலம் விசாரித்த ஜெயல்லிதா அவருக்கு ஆறுதலும் கூறினார். பின்னர் மருத்துவர்களிடம் அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஈரோடு வந்த அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக தொண்டர் தங்கவேலுவின் சிகிச்சைக்கான செலவுகளை அதிமுகவே முழுமையாக ஏற்கும். அவரது குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும்.
பென்னாகரம் தொகுதியில், அதிமுக டெபாசிட் இழந்த்தை பெரிதுபடுத்திப் பேசுகிறார்கள்.
எம்.ஜி.ஆர். காலத்திலேயே ஓசூர், கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
மேலும், இதே பென்னாகரத்தில் 2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவும் கூட டெபாசிட்டை இழந்த்து என்பது குறிப்பிடத்தக்கது என்றார் ஜெயலலிதா.
முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தங்கவேலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.