கிஷன்ஜி சாகவில்லை- பத்திரமாக இருக்கிறார்: மாவோயிஸ்டுகள்
கொல்கத்தா: கிஷன்ஜி காயமடையவில்லை. பத்திரமாக இருக்கிறார் என்று மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கையில் இறங்கினர். மார்ச் 24ம் தேதி லால்கர், சல்போனி, லக்கான்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரத் தாக்குதல் நடந்த்து.
இந்தத் தாக்குதலில் மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. அவர் கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறின. இருப்பினும் இவை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் கிஷன்ஜி உயிருடன் இருப்பதாகவும், அவர் காயமடையவில்லை என்றும் நக்சலைட்டுகள் அறிவித்துள்ளனர்.
சட்டிஸ்கரில் மிகக் கொடூரமாக 83 சிஆர்பிஎப் படையினரைக் கொன்று குவித்த சில மணி நேரங்களில் கிஷன்ஜி உயிருடன் இருக்கும் தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பியுள்ள பேக்ஸ் செய்தியில், எங்களது அமைப்பின் மாநிலக் கமிட்டி, மத்திய கமிட்டி, பொலிட்பீரோ ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருக்கும் ஒருவர் கூட காயமடையவில்லை அல்லது இறக்கவும் இல்லை.
மார்ச் 24ம் தேதி பாதுகாப்புப் படையினர் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் அப்பாவி மக்கள்தான் உயிரிழந்துள்ளனர். எங்களது இயக்கத்தைச் சேர்ந்த யாருமே காயமடையவில்லை, இறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேக்ஸ் செய்தியை ஒரிசா மாவோயிஸ்ட் பிரிவு அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications