பிளஸ்டூ விடைத்தாள் மாயம் – 267 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு
சென்னை: விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரத்தில் முசிறியைச் சேர்ந்த 267 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இதுகுறித்து சட்டசபையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்து அமைச்சர் பேசுகையில்,
திருச்சி மாவட்டம், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த மாதம் 8ம் தேதி பிளஸ் 2 இயற்பியல், பொருளாதாரம் தேர்வு நடந்தது. இத்தேர்வு மையத்தில் தண்டலைபுத்தூர், துலையாநத்தம், முசிறி, அய்யம்பாளையம், கொளக்குடி உள்ளிட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இயற்பியல் மற்றும் பொருளாதார தேர்வை 487 பேர் எழுதியுள்ளனர்.
தேர்வு எழுதிய விடைத்தாள்கள் முறையாக சீலிடப்பட்டு, கல்வி அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு, முசிறி தபால் துறையில் ஒப்படைக்கப்பட்டது. தபால் துறையினர் என்.கே.டிரான்ஸ்போர்ட் பஸ் மூலம் ஸ்ரீரங்கம் தபால் அலுவலகத்துக்கு அனுப்பினர். பஸ்சில் அனுப்பப்பட்ட பார்சலில் விடைத்தாள்கள் அடங்கிய பார்சல் காணவில்லை.
இந்தப் பார்சலை தேடும் பணி நடந்து வருகிறது. வரும் பத்தாம் தேதிக்குள் விடைத்தாள்கள் கிடைக்காவிட்டால் அந்த 267 மாணவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்தி அந்த முடிவும், பிளஸ்டூ தேர்வு முடிவுடன் சேர்த்து வெளியிடப்படும் என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications