செபி - ஐஆர்டிஏ மோதல்... அரசு நடவடிக்கை எடுக்கும் - நிதித் துறை அறிவிப்பு
டெல்லி: யூலிப் இன்சூரன்ஸ் பாலிசி விற்க 14 தனியார் நிறுவனங்களுக்கு செபி விதித்த தடை மற்றும் அந்தத் தடைக்கு ஐஆர்டிஏ எதிர்ப்புத் தெரிவித்ததால் எழுந்துள்ள பிரச்சினை குறித்து மத்திய அரசு விசாரிக்கும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடிய வகையிலான யூலிப் இன்சூரன்ஸ் திட்டங்களை, பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபியின் அனுமதியின்று 14 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்து பெரும் முதலீட்டைத் திரட்டி வருகின்றன.
இதுகுறித்து செபி ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியும், அதைக் கண்டு கொள்ளாமல் இதுபோன்ற பாலிஸிகளை விற்று வந்தன. இதனால் கடந்த வெள்ளிக் கிழமை முதல் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் யூலிப் பாலிசிகளை விற்க அதிரடி தடை விதித்தது செபி.
ஆனால் அடுத்த நாளே அதைக் கடுமையாக எதிர்த்தது, காப்பீட்டு நிறுவனங்களின் ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏ.
செபியின் தடைக்கு 14 தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் கட்டுப்படத் தேவையில்லை என்றது ஐஆர்டிஏ.
இதனால் அரசு அமைப்புகள் இரண்டும் கடுமையாக மோதிக்கொள்ளும் சூழல் உருவானது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சக செயலர் அசோக் சாவ்லா இதுகுறித்து கூறுகையில், "செபி மற்றும் ஐஆர்டிஏ ஆகிய இரு அமைப்புகள் பிறப்பித்துள்ள ஆணைகள் குறித்தும் அரசு பரிசீலித்து இறுதி முடிவு அறிவிக்கும்..." என்றார்.












Click it and Unblock the Notifications