சீட்டுப் பிடித்து ரூ. 10 கோடி மோசடி – கணவன், மனைவி ஓட்டம்
சென்னை: ஏலச் சீட்டு நடத்தி ரூ. 10 கோடி வரை மோசடி செய்ததாக கணவன் மனைவி மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்பட்டள்ளது.
வேளச்சேரி நேரு நகர் ஏ.எல்.முதலியார் தெருவை சேர்ந்தவர் குமாரராஜா (45), இவரது மனைவி பிரகதீஷ்வரி (40). இருவரும் ஷேர் மற்றும் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்துகின்றனர்.
இவர்களிடம் ஏராளமானோர் ரூ. 1 லட்சம் வரை சீட்டுப் பணம் கட்டி வந்தனர். பணத்துக்கு 10 சதவீத வட்டி தருவதாக கூறப்பட்டதால் நிறையப் பேர் சேர்ந்துள்ளனர்.
சீட்டுப் பணம் முடிவடைந்த 20 பேருக்கு குமாரராஜா தம்பதி காசோலை தந்துள்ளது. ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாத்தால் அவை திரும்பி விட்டன. இதையடுத்து குமார ராஜாவை அணுகி கேட்டுள்ளனர் பாதிக்கப்பட்டோர். இதையடுத்து இப்போது தருவதாகவும், அப்போது தருவதாகவும் அலைக்கழித்துள்ளார் குமார ராஜா.
இந்த நிலையில் கணவனும், மனைவியும் தப்பி விட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 500 பேர் இன்று மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தனர்.
கிட்டத்தட்ட ரூ. 10 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தப்பி ஓடி விட்ட கணவன், மனைவியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications