Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலித் வீடுகளுக்கு பாஜக தலைவர் கத்காரி விசிட்- வடை, பஜ்ஜி சாப்பிட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை வந்திருந்த பாஜக தலைவர் நிதின் கத்காரி நேற்று தலித் குடிசைப் பகுதிக்கு விசிட் அடித்து அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர்கள் அன்பாக கொடுத்த வடை, பஜ்ஜி உள்ளிட்டவற்றை ருசித்துச் சாப்பிட்டார்.

கத்காரி எந்த மாநிலத்திற்குப் போனாலும் தவறாமல் ஒரு தலித் குடிசைப் பகுதிக்குச் செல்வதை வழக்கமாக்கியுள்ளார். ராகுல் காந்தியின் தலித் குடிசை விசிட்டுக்குப் பதிலடி கொடுப்பது போல இவ்வாறு செய்து வருகிறார் கத்காரி.

அந்த வகையில் சென்னைக்கு வந்திருந்த அவர் நேற்று மாலையில் தலித் குடிசைப் பகுதிக்குச் சென்றார்.

ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஆஞ்சநேயா நகர் குடிசைப் பகுதிக்கு அவர் விசிட் அடித்தார். அங்குள்ள மக்கள் கத்காரி வருகையை அறிந்து திரண்டு வந்தனர். பின்னர் அவரை வரவேற்று கயிற்றுக் கட்டில் ஒன்றைப் போட்டு அமரக் கூறினர்.

அதில் அமர்ந்தபடி அவர்களிடம் பேசினார் கத்காரி. குறைகளையும் கேட்டார். பிறகு அப்பகுதி இளைஞர்கள் பயன்பாட்டுக்காக 2 கம்ப்யூட்டர்களை பரிசாக அளித்தார்.

பிறகு பாஜகவின் ஆதி திராவிடர் பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜ், பூபதி ஆகியோரின் வீடுகளுக்கு விசிட் அடித்தார் கத்காரி.

கத்காரிக்கு மக்கள் வீடுகளின் மேல் இருந்தபடி மலர் தூவி வரவேற்றனர். கத்காரியின் வருகையால் அந்தக் குடிசைப பகுதியில் ஆச்சரியம் நிரம்பி வழிந்தது.

வட சென்னையில் உள்ள மிகப் பெரிய குடிசைப் பகுதி இது. இங்கு கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கத்காரியின் வருகையை முன்னிட்டு இங்குள்ளவர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்காரிக்கு அங்குள்ள மக்கள் வடை, பஜ்ஜி, ஸ்வீட் உள்ளிட்டவற்றைக் கொடுத்து அசத்தினர். அவரும் சளைக்காமல் வாங்கிச் சாப்பிட்டு நன்றாக இருப்பதாக பாராட்டினார்.

பின்னர் அவர்களிடையே பேசிய கத்காரி, நாம் அரசியல் என்ற கருவியைப் பயன்படுத்தி சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றார்.

மாநில பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன், தமிழிசை செளந்தர்ராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

முன்னதாக குடிசைப் பகுதிக்கு வருவதற்கு முன்பு அயனாவரம் ஐசிஎப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கத்காரி மாலை அணிவித்தார். இந்த சிலை கடந்த 1984ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாயால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாலை அணிவித்த பின்னர் கத்காரி பேசுகையில், நான் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுபவன். தீண்டாமைக்கும், பாகுபாட்டுக்கும் எதிராக அனைவரும் செயல்பட உறுதி பூண வேண்டும். சமூகத்தில் உள்ள அனைவரும் சம உரிமையுடன் வாழ வழி செய்ய வேண்டும் என்றார்.

தவறான சித்தரிப்பால் பாஜகவின் பெயர் கெட்டு விட்டது

முன்னதாக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் கத்காரி.

அப்போது அவர் கூறுகையில்,

பாஜக குறித்த தவறான சித்தரிப்பு காரணமாகவே தமிழகத்தில் அக்கட்சிக்கு கெட்ட பெயர் நிலவி வருகிறது. இதை மாற்ற வேண்டும். பாஜக எந்த ஒரு மதத்திற்கு சாதகமானதோ அல்லது எதிரானதோ அல்ல.

பாஜகவின் ஒரே எதிரி தீவிரவாதிகளும், சமூக விரோதிகளும்தான். எங்கள் மீதான தவறான பெயர்தான் பெரும் பாதகமாக உள்ளது. அதை மாற்ற கடுமையாக உழைப்போம், மக்களின் நம்பிக்கையைப் பெறப் பாடுபடுவோம்.

இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் மட்டுமே கட்சியில் நீடிக்க முடியும். கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் மட்டுமே இங்கு இருக்கலாம். மற்றவர்கள் தாராளமாக வெளியேறி விடலாம். கட்சிதான் இங்கு முக்கியம்.

மிகக் கடுமையாக உழைப்பதன் மூலம் தமிழகத்தில் வலுவான அரசியல் சக்தியாக பாஜக மாற முடியும். திராவிடக் கட்சிகளைத் தாண்டி வளருவதென்பது மிகப் பெரிய சவால்தான். ஆனால் சவாலை ஏற்கத்தான் வேண்டும். சவால்கள் எங்குமே இருக்கக் கூடியதுதான். அதைக் கண்டு பின் வாங்க முடியாது.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி அல்லாத அரசு ஆட்சி நடந்தபோதெல்லாம் விலைவாசியும், பணவீக்கமும் உயரவில்லை. மொரார்ஜிதேசாய், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது விலைவாசி கட்டுக்குள் இருந்தது. எப்போது எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் விலைவாசியும், பணவீக்கமும் உயர்வது வாடிக்கையாகி விட்டது.

இதற்கெல்லாம் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையும், திறமையற்ற நிர்வாகமும்தான் காரணம். இதனால் ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது.

நமது நாட்டில் 2002-ம் ஆண்டு ஒரு நபருக்கு 494 கிராம் உணவு பொருள் கிடைத்தது. இப்போது 439 கிராம்தான் கிடைக்கிறது.

மேற்குவங்காளத்தில் உருளைக்கிழங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் போதுமான குளிர்பதன கிடங்குகள் பராமரிப்பு இல்லாமல் கிடப்பதுதான்.

மத்திய அரசின் உணவு பொருள் கிடங்குகள் எல்லாம் நிரம்பி வழிகிறது. ஆனால் உணவு பொருட்கள் மக்களுக்கு கிடைக்காமல் வீணாகிறது. இவ்வாறு வீணாகும் உணவு பொருட்களை மது தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கொடுக்கிறார்கள்.

விளைந்த உணவு பொருள்களை சேமித்து வைக்க போதிய கிடங்குகள் இல்லாததால் அவை கள்ளச் சந்தைக்கு போகின்றன. அத்தியாவசிய உணவு பொருள்கள் மீதான அனைத்து வர்த்தகத்தையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு போதிய உணவு பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

பிரதமர் சிறந்த பொருளாதார நிபுணர். என்றாலும் ஏன் விலைவாசி உயர்வை குறைக்க முடியவில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் விலைவாசியை குறைப்போம் என்று கூறினார்கள். இப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனாலும் விலைவாசி குறைந்தபாடில்லை. இதற்கு காங்கிரஸ் அரசுதான் பொறுப்பு ஏற்கவேண்டும். விலைவாசி உயர்வு குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

விலைவாசி உயர்வு குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று சவால் விடுகிறேன். ஆனால் காங்கிரஸ் இதற்கு தயாராக இல்லை. அதே போல விலைவாசி உயர்வு குறித்து நான் கேட்டிருந்த 14 கேள்விகளுக்கு இதுவரை ஏன் பதில் அளிக்கவில்லை? உச்சகட்ட பணவீக்கம் மற்றும் உணவு பொருள்களின் உச்சகட்ட விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சியின் லஞ்சம் மற்றும் நிலையில்லாத குழப்பமுமே காரணம் ஆகும்.

உணவுப்பொருள் நிர்வாகத்தில் குறிப்பாக ஆராய்ச்சி, வளர்ச்சி, உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு கிடங்குகள், பாதுகாப்பு, வினியோகம் ஆகியவற்றில் மத்திய அரசு பலமிழந்து விட்டது. விவசாய வளர்ச்சிக்கு முன்னுரிமையும், கிராமப்புறங்களில் குளிர்பதன கிடங்குகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளை அதிகரிப்பதுமே பா.ஜனதாவின் முன்னுரிமை ஆகும்.

பணவீக்க விகிதம் உலகத்திலே இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. இந்தியாவில் பணவீக்கம் 11 சதவீதத்தை தாண்டிவிட்டது. சீனா மற்றும் தென் கொரியாவில் 2.7 சதவீதமும், அமெரிக்காவில் 2.6 சதவீதமும், மலேசியாவில் 1.3 சதவீதமும், ஐரோப்பாவில் 0.9 சதவீதமும், சிங்கப்பூரில் 0.2 சதவீதமும் பணவீக்கம் உள்ளது.

மின்சார பற்றாக்குறை, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வறுமை ஏற்பட்டு இந்தியா முழுவதும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு நதிகளை இணைப்பதுதான்.

கங்கை-காவிரி இணைப்புக்கு முக்கியத்துவம்


குஜராத்தில் நர்மதா நதி இணைப்பு திட்டத்தின் மூலம் 20 சதவீதம் நீர்வளம் அதிகமாகி உள்ளது. நிர்வாக திறமையால்தான் குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளது.

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். முதல் கட்டமாக கங்கை-காவிரி இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இந்த திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமானதுதான்.

நதி நீர் இணைப்பின் மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டும் 4500 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். அது மட்டுமல்லாமல், 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் ந்ம்மால் உருவாக்க முடியும். இதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 76 போலீசார் பலியானதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டியது இல்லை. இது சமூக, பொருளாதார பிரச்சினை. ஆகவே நக்சலைட்டுகளை ஒழிக்கும் பிரச்சினையில் நாங்கள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக இருக்கிறோம். தயவு செய்து இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம்.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சியை வளர்ப்பதற்காக திட்டங்களை வகுத்துள்ளோம். தமிழகத்தில் பாரதீய ஜனதாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்காக கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்திக்கவேண்டும் என்று கூறி உள்ளோம். கர்நாடக மாநிலத்தில் ஒரு எம்.எல்.ஏ.வுடன் ஆரம்பித்த பா.ஜனதா இன்றைக்கு ஆளும் கட்சியாக வளர்ந்து இருக்கிறது. இதை தமிழக பா.ஜனதா உதாரணமாக கொள்ளலாம்.

விலைவாசி உயர்வை கட்டுபடுத்தக் கோரி, மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் 10 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கப் போகிறோம். ஏப்ரல் 21ம் தேதி இது தொடங்கும். 10 கோடி கையெழுத்தைப் பெற்ற பின்னர் அதை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் வழங்கவுள்ளோம் என்றார் கத்காரி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+