தமிழகத்தில் 5 புதிய தாலுகாக்கள்-7 பாலிடெக்னிக்குகள்
சென்னை: கோவை, நாமக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 5 புதிய தாலுகாக்கள் உருவாக்கப்படும் என்று சட்டபையில் வருவாய் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
வருவாய்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசுகையில்,
தமிழகத்தில் சுனாமி பாதித்த பகுதிகளில் 17,000 வீடுகள் கட்டி தர உலக வங்கியிடம் கடன் கோரப்பட்டுள்ளது.
நிர்வாக வசதிக்காக புதிதாக 5 தாலுகாக்கள் உருவாக்கப்படும். கீழக்கரை (ராமநாதபுர மாவட்டம்) , திருவோணம் (தஞ்சாவூர் மாவட்டம்) , கீழபெண்ணாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்), அன்னூர் (கோவை மாவட்டம்), கொல்லிமலை (நாமக்கல் மாவட்டம்) ஆகியவை புதிய தாலுகாக்களாக செயல்படும்.
இதன்மூலம் தமிழகத்தில் தாலுகாக்கள் எண்ணிக்கை 225 ஆக உயர்கிறது.
7 புதிய பாலிடெக்னிக்குகள்:
இதையடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனது துறைக்கான கொள்கை விளக்க அறிக்கையை தாக்கல் செய்து கூறுகையில்,
தர்மபுரி, கரூர், பெரம்பலூர், தேனி, திருவாரூர், விழுப்புரம் , திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டகளில் மத்திய அரசு நிதியுதவியுடன் பாலிடெக்னிக்குகள் தொடங்கப்படும்.
காஞ்சிபுரத்தில் இந்த ஆண்டே பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என்றார்.