ஐபிஎல் விவகாரத்தில் பாஜகவில் உட்கட்சிப் பூசல் வெடித்தது!

இந்த முறைகேடுகளில் தொடர்புடைய மத்திய அமைச்சர் சரத் பவார் அவரது சிஷ்யரான இன்னொரு மத்திய அமைச்சர் பிரபுல் படேல் ஆகியோரை காப்பாற்ற பாஜக தலைவர் அருண் ஜேட்லி முயல்வதாக மூத்த பாஜக தலைவரான மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று காலை பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய மேனகா, சசி தரூரை ராஜினாமா செய்ய வைக்க பாஜக அரும்பாடுபட்டது. இதனால் கட்சிக்கு நல்ல பெயரும் கிடைத்தது. ஆனால், அதை கட்சி தக்க வைத்துக் கொள்ளவில்லை.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவராக உள்ள பாஜக தலைவர் அருண் ஜேட்லி, அந்த வாரியத்தின் முன்னால் தலைவரான மத்திய அமைச்சர் சரத் பவாரையும் அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிரபுல் படேலையும் காப்பாற்ற முயல்கிறார்.
இதனால் தான் ஐபிஎல் முறைகேடுகளில் தொடர்புடைய இந்த இருவருக்கு எதிராக நமது கட்சி வாயே திறக்க மறுக்கிறது.
பிரபுல் படேலின் மகள் பூர்ணா பல விதிகளை காற்றில் பறக்கவிட்டு அரசு விமானங்களையே தான் விரும்பியபடி பயன்படுத்தியுள்ளார். ஆனால், மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது கமாண்டோக்களை அங்கு அனுப்ப சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்ய ஏர் இந்தியாவுக்கு 8 மணி நேரம் பிடித்தது. பூர்ணா படேல் கேட்டவுடன் ஒரு விமானம் தரப்படுகிறது.
இதை பாஜக ஏன் பிரச்சனையாக்காமல் மெளனம் காக்கிறது?. மக்கள் பிரச்சனைகளில் இப்படி வேஷம் போட்டால் யார் நம்மை நம்புவார்கள் என்றார் மேனகா.
கூட்டத்தில் இருந்த அருண் ஜேட்லி அண்ட் கோ இதை மெளனமாக பார்த்தபடி அமர்ந்திருந்தது.
மேனகா பேசி முடித்த பின் எழுந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்காவும் ஜேட்லியை ஒரு பிடி பிடித்தார். அவர் கூறுகையில், மேனகா சொல்வது மிகவும் சரி. நாம் சரத் பவார் மற்றும் பிரபுல் படேலின் ராஜினாமாவையும் கோரி அரசை நெருக்குவது தான் சரியாக இருக்கும். மேலும் இந்த விவகாரத்தில் மெளனம் காக்கும் பிரதமர் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.
இதையடுத்து அருண் ஜேட்லியின் ஜால்ராவான மூத்த தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா எழுந்து பவார், படேல் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் தான் நாம் அவர்களது ராஜினாமாவைக் கோரவில்லை என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த பல பாஜக எம்பிக்களும் அவரை சத்தம்போட்டு மேற்கொண்டு பேச விடாமல் உட்கார வைத்தனர்.
நிலைமை மோசமானதையடுத்து இன்னொரு மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் எழுந்து, மேனகா சொல்வதை நாம் கேட்க வேண்டும் என்றார்.
ஜேட்லிக்கும் சுஷ்மாவுக்கும் இடையே பெரும் அதிகாரப் போட்டி நடந்து வருவதும் நினைவுகூறத்தக்கது.
பிரதமர் மீது உரிமை மீறல் நோட்டீஸ்:
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் மீது பாஜக உரிமை மீறல் பிரச்சனை கிளப்பியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார் குறித்து, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை இல்லை என்ற அரசின் முடிவை நாடாளுமன்றத்தில் அறிவிக்காமல் அதை வெளியே பிரதமர் வெளியிட்டுவிட்டதாகக் கூறி உரிமை மீறல் பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications