பல நாடுகளில் பணியாற்றும் 'ரா' அதிகாரிகள் விவரத்தை பாக்.கிடம் தந்த மாதுரி!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வளைகுடா நாடுகள் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ரா அதிகாரிகளின் விவரத்தை அவர் பாகிஸ்தானுக்கு தந்திருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் பல்வேறு நாடுகளில் இந்தியத் தூதரகங்களில் ரகசியமாக பணியாற்றும் ரா அதிகாரிகள் விவரத்தையும் அவர் பாகிஸ்தானுக்கு தந்திருக்கலாம் என்று தெரிகிறது.
அவரிடம் மத்திய உளவுப் பிரிவினர் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானின் உள்நாட்டு உளவுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான முடாசர் ராணாவை மாதுரிக்கு ஒரு பத்திரிக்கையாளர் தான் அறிமுகப்படுத்தி வைத்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் ராணாவுடன் தான் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும், அதே நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை என்றும் மாதுரி குப்தா கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத் தூதரகத்தில் இருந்த இந்திய உளவுப் பிரிவுகளுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்ட அறிக்கைகளின் நகல்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணாவிடம் அவர் வழங்கி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இஸ்லாபாத்தில் உள்ள மார்காஸ் சூப்பர் மார்க்கெட், ஐஎப்எப்ஐ கபே ஆகிய இடங்களில் வைத்து ராணாவை மாதுரி அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.
மாதுரியின் இந்த செயல்களுக்காக பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ அவ்வப்போது ஏராளமான பணம் தந்துள்ளது. அதை பாகிஸ்தானில் உள்ள தனது வங்கிக் கணக்கில் போட்டுவிட்டு பின்னர் இந்தியாவில் உள்ள தனது வங்கிக் கணக்குகளுக்கு மாதுரி டிரான்ஸ்பர் செய்துள்ளார்.
ரா அதிகாரியே உளவாளி தான்-மாதுரி:
இந் நிலையில் டெல்லியில் தன்னை விசாரிக்கும் அதிகாரிகளிடம் பேசிய மாதுரி, இஸ்லாபாத்தில் உள்ள ரா பிரிவின் தலைவர் ஆர்.கே.ஷர்மாவே ஒரு பாகிஸ்தான் உளவாளி என்றும் குண்டைப் போட்டுள்ளார்.
இதனால் அவரிடமும் விசாரணை நடக்கிறது. ஆனால், மாதுரியின் நடவடிக்கைகளில் சந்தேகம் உள்ளதாக மத்திய அரசை 5 மாதங்களுக்கு முன்பு எச்சரித்ததே ஷர்மா தான் என்பதால் அவரை பழிவாங்க மாதுரி இவ்வாறு குற்றம் சாட்டுவதாகவும் கருதப்படுகிறது.
கண்காணிப்பில் ராணுவ அதிகாரிகள்:
இந் நிலையில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரியுடன் குப்தா இ-மெயில் மூலம் தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரும் மேலும் சில ராணுவ அதிகாரிகளும் ரா அமைப்பால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications