சென்னையில் குடும்பத்தாரால் அனாதரவாக விடப்பட்ட 101 மன நோயாளிகள் மீட்பு
சென்னை: குடும்பத்தார், உற்றார், உறவினர்களால் சென்னை நகர தெருக்களில் அனாதரவாக விடப்பட்ட 101 மனநோயாளிகளை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஒரு மகா மோசமான பழக்கம் சமீபகாலமாக மக்களிடையே பரவி வருகிறது. மன நோயால் பாதிக்கப்பட்டோரையும், முதியோர்களையும் ஈவு இரக்கமின்றி தெருக்களில் விட்டு விட்டுப் போய் விடுகின்றனர்.
வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருப்போரும் இந்த மனிதாபிமானமற்ற செயலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மனிதாபிமானத்துடன் மன நோயாளிகளை மீட்டு பராமரிக்கும் புதிய திட்டத்தை மாநகராட்சி நேற்று முன்தினம் அறிவித்தது. பொதுமக்கள் மன நோயாளிகளை தெருக்களில் பார்த்தால் தகவல் தெரிவிப்பதற்காக உதவி சுகாதார அலுவலர்கள் 10 பேரின் போன் எண்களும் கொடுக்கப்பட்டன.
நேற்று ஒரே நாளில் 470 போன் அழைப்புகள் வந்தன. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 101 பேரை மீட்டு தண்டையார்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஒரே வார்டுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் பல மொழிகளில் வாய்க்கு வந்ததை பேசியும் சிரித்த படியும் உள்ளனர்.
அவர்களை மருத்துவமனை ஊழியர்களும் பராமரித்து வருகிறார்கள். முடிதிருத்தி, குளிப்பாட்டி, புத்தாடைகள் அணிவித்து, அவர்கள் கேட்கும் உணவுகளை வழங்கி வருகிறார்கள்.
மீட்கப்பட்ட மனநோயாளிகளின் பெயர் விவரங்கள், மாநகராட்சி இணையதளத்தில் போட்டோவுடன் வெளியிடப்படும். அடையாளம் தெரிந்து உறவினர்கள் வந்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
மேயர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை துணை ஆணையர் ஜோதி நிர்மலா மற்றும் மருத்துவக்குழுவினர் இன்று அவர்களை பார்வையிட்டனர்.
பின்னர் மேயர் கூறுகையில்,
மனிதாபிமான அடிப்படையில் மாநகராட்சி இந்த பணியை மேற்கொள்கிறது. இன்றைக்குள் 150-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்படுவார்கள். அவர்கள் அனைவருக்கும் விரும்பி கேட்கும் உணவு உள்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த மனிதாபிமான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கு மாத சம்பளத்துடன் ரூ.500 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
வருகிற 3-ந்தேதி நீதிமன்றம், காவல்துறை, டாக்டர்களின் பரிந்துரை பெற்று அனைவரும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications