தேர்வில் தோல்வி – 674 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் டிஸ்மிஸ்
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டிருந்த 674 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1999 முதல், 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.2,500 ஊதியத்தில் 5 ஆண்டுகளுக்கு நியமித்து இருந்தன. 5 ஆண்டுகள் முடிந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன் அடிப்படையில் அவர்களுக்குத் தனியாக தேர்வு நடத்தி 1,800 கணினி ஆசிரியர்களையும் பணியில் அமர்த்த அரசு உத்தரவிட்டது. அவர்கள் பி.எட். பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டனர்.
அவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்கும் போதே, அவர்களைப் பணி நியமனம் செய்வது சரியல்ல. அவர்களுக்கு பி.எட். கல்வித் தகுதி இல்லை. மேலும் இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படவில்லை என்று பி.எட். பட்டம் பெற்ற கணினி பட்டதாரிகள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
ஆனாலும் தேர்வு நடத்தி 50 சதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பணி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 1800 பேரும் பணியமர்த்தப்பட்டனர். அவர்களில் 35 சதம் மதிப்பெண் பெற்றவர்களும் இருந்தனர். எனவே பி.எட். பட்டம் பெற்ற கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் மீண்டும் நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் 50 சதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவோருக்கே பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால் 35 சதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பணி வழங்கப்பட்டு இருப்பது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்று என்று நீதிமன்றத்தில் அச்சங்கம் தெரிவித்தது.
எனவே 35 முதல் 49 சதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்வு எழுதிய 800 பேரில் 126 பேர் மட்டுமே பாஸ் ஆகியுள்ளனர். இதையடுத்து தேர்வில் தோல்வி அடைந்த 674 பேரையும் பணி நீக்கம் செய்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications