'வீராசாமி முதலாளி; நான் கடைக்கார பையன்'-துரைமுருகன்
சென்னை: மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், சட்டசபையில் மின்துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக கொள்கை விளக்கக் குறிப்புகளை சட்ட அமைச்சர் துரைமுருகன் தான் தாக்கல் செய்தார்.
மேலும் மின்துறை தொடர்பாக நடந்த விவாதங்களுக்கும் துல்லியமான புள்ளி விவரங்களுடன் பதில் தந்து எம்எல்ஏக்களை அசரடித்தார்.
துரைமுருகன் பேசுகையில், ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக் குறைவு காரணமாக நான் பதில் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த துறையில் மிகுந்த அனுபவம் மிக்கவர். இந்த இலாகாவைப் பொருத்தளவில் அவர் பெருங்கடல். எனக்கு சம்பந்தம் இல்லாததால் அவர் அளவு பதில் சொல்ல முடியாது.
ஆற்காடு வீராசாமி கடை முதலாளி. நான் கடைக்கார பையன் மாதிரி. கொஞ்ச நேரம் இந்த கடையை பார்த்துக் கொள் என்றதால் பார்த்திருக்கிறேன். இனி நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்தால் சொல்கிறேன். இல்லை என்றால் அவர் வந்ததும், அவரிடம் தந்து விடுகிறேன் என்றார்.
அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி, கடையை கொஞ்ச நேரம் பார்க்க சொன்னாலும் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்.