யூரோ மதிப்பு பெரும் சரிவு... இந்திய ஐடி துறை பாதிப்பு!
அமெரிக்காவின் லேஹ்மன் பிரதர்ஸ் வங்கியின் சரிவுக்குப் பிறகு யூரோ மதிப்பு பெருமளவு சரிந்தது. ஆனால் அதேநேரம் டாலரின் மதிப்பில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அதன் மதிப்பு கிட்டத்தட்ட நிலையாகவே இருந்தது.
ரூபாய்க்கு நிகரான யூரோ மதிப்பும் கூட நிலைப்படுத்தப்படவில்லை. நான்கு ஆண்டுகளாக இந்த நிலைதான் நீடிக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை டாலருக்கு அடுத்து முக்கிய சந்தை மதிப்பாகத் திகழ்வது யூரோதான். 15 பில்லியன் டாலர் அளவுக்கான ஏற்றுமதிகள் யூரோ மூலமே நடக்கின்றன.
மகிந்திரா சத்யம், டயிள்யூஎன்எஸ் குளோபல் சர்வீஸஸ், மாஸ்டெக் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவைவிட அதிகமாக ஐரோப்பிய நாடுகளில்தான் வர்த்தகம் செய்கின்றன.
மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போஸிஸ் மற்றும் விப்ரோ போன்றவற்றின் 25 சதவிதம் வரை யூரோக்களாகவும் பவுண்டுகளாகவும்தான் கிடைக்கின்றன.
இந்த நிலையில், கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து யூரோ மதிப்பு மேலும் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி 1.22 டாலராக யூரோ மதிப்பு சரிந்துவிட்டது. 1.24- டாலருக்குக் கீழே யூரோ மதிப்பு கீழே சரியாது என்று அனைவருமே நம்பிக்கொண்டிருந்த நிலையில், இந்த திடீர் சரிவு, பல முனை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாதிப்பின் அளவு குறித்து கருத்து தெரிவிக்க பல நிறுவனங்கள் முன்வரவில்லை. ஆனால் மாற்று நடவடிக்கைகளை சில நிறுவனங்கள் யோசிக்க ஆரம்பித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
எச்.சி.எல் நிறுவனம் தனது வருவாயில் 29 சதவிகிதம் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், டெக் மஹிந்திரா நிறுவனம் 59 சதவிகித வருவாயை பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெற்ற வந்தது. இப்போது யூரோவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் இந்த நிறுவனங்களின் வருவாயில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான் என பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.
டி.சி.எஸ் மற்றும் விப்ரோவின் வருவாயும் யூரோ வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.