பிஎஸ்என்எல் 3ஜி செல்போனில் இனி டி.வி-சினிமா பார்க்கலாம்!
சென்னை: 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதியில் தான் வீடியோ செல்போன் சேவைகளை அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது 3ஜி செல்போன் சேவையை முன்பே அறிமுகப்படுத்திவிட்டது.
இப்போது 'பிஎஸ்என்எல் லைவ் போர்டல்' என்ற 3ஜி சேவை மூலம் செல்போனில் தமிழ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மொழிகளில் டி.வி. சேனல்களை பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று சென்னையில் இந்த சேவையை துவக்கி வைத்த பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கோயல் நிருபர்களிடம் கூறுகையில்,
பிஎஸ்என்எல் நிறுவனம்தான் நாட்டிலேயே முதல் முறையாக 3ஜி சேவையை வழங்கியுள்ளது. இப்போது 480 நகரங்களில் 3ஜி சேவை வழங்கப்படுகிறது. அடுத்த 6 மாதங்களில் 650 நகரங்களுக்கு இந்தச் சேவை விரிவுப்படுத்தப்படும்.
இந்த 'பிஎஸ்என்எல் லைவ் போர்டல்' என்ற 3ஜி சேவை மூலம் செல்போனில் தமிழ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மொழிகளில் டி.வி. சேனல்களை பார்க்கலாம். செய்தி, இசை, பொழுதுபோக்கு, குழந்தைகளுக்கான சேனல், மண்டல சேனல்களை பார்க்கலாம்.
மேலும் திரைப்படத்தையும் பார்க்க முடியும். இதற்கு ரூ.40 கட்டணமாகச் செலுத்த வேண்டும். விரும்பிய வீடியோக் காட்சிகளை ரூ.5 முதல் ரூ.20 கட்டணமாகச் செலுத்திப் பார்க்கலாம். புதிய சினிமா பாடல்களை ரூ.15 செலுத்தி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் பல கம்ப்யூட்டர் விளையாட்டுகளையும் டவுன்லோட் செய்லாம். ஒவ்வொரு விளையாட்டுக்கும் தகுந்தாற்போல ரூ.35 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
தென் மாநிலங்களில் 72 நகரங்களில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. இது மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் 3ஜி சேவை பெற்றுள்ளனர்.
3ஜி சேவையைக் கிராமப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இனி 3ஜி சேவை மூலம் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் தொடர்பான சந்தேகங்களையும், முதலுதவிகளையும் செல்போன் மூலமே பெற முடியும். கல்வித் துறை தொடர்பான விளக்கங்களை, வகுப்புகளை ஆன்லைன் மூலம் செல்போன் மூலம் பெற முடியும்.
1995ல் தான் செல்போன் சேவை பயன்பாட்டுக்கு வந்தது. பிஎஸ்என்எல் நிறுவனம் 7 ஆண்டுகளுக்குப் பிறகுதான் செல்போன் சேவையில் கால்பதித்தது. இப்போது பிஎஸ்என்எல்க்கு 10 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
பிஎஸ்என்எல், ஏர்டெல் உள்ளிட்ட ஒட்டுமொத்த செல்போன் நிறுவனங்களின் வருவாய் ரூ. 1,50,000 கோடி. இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் பங்கு 20 சதவீதம். எனவே வருவாயைப் பொருத்தவரையில் பிஎஸ்என்எல் நிறுவனம் 2வது இடத்தில் உள்ளது.
கண்ணாடி இழை கேபிள் மூலம் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கப்படும்போது 100 எம்.பி. முதல் 1,000 MB வரை தரமான சேவை கிடைக்கும்.
29,000 கிராமங்களில் பிஎஸ்என்எல் இணைப்பகங்கள் உள்ளன. இங்கு வயர்லெஸ் இணையதள சேவையும், அதிவேக இண்டர்நெட் சேவையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 2.40 லட்சம் கிராமங்களில் வை-மேக்ஸ் என்ற அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கப்படும். அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும்.
கடந்த ஆண்டில் ரூ. 35,800 கோடி வருவாய் இருந்தது. இதில் ரூ.10 ஆயிரம் கோடி செல்போன் சேவை மூலம் பெறப்பட்டது. இந்த முறையும் அதே வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications