Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை மாபெரும் திருநாளாக கொண்டாட அன்பழகன் அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை, செந்தமிழின் செம்மொழித் தகுதியை நிலைநிறுத்திய நன்னாளாக கொண்டாட வேண்டும் என்று நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வாழ்வில் ஓர் திருநாள்

வரும் ஜுன் 3-ம் நாள் தமிழர்தம் வாழ்வில் ஓர் திருநாள்;

வாழ்வினில் நலம் பெறாதார்க்கெல்லாம் நலஞ்செய் திட்டத்தால்

வாழ்வினில் ஒளிபெறச் செய்த நாள் கலைஞரின் பிறந்தநாள்.

திராவிட இன எழுச்சிக்கும்,

தன்மான நல்லுணர்வுக்கும்,

பகுத்தறிவு வழிச் சிந்தனைக்கும்,

சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுத்து,

புதியதோர் தமிழகம் படைக்கவும்,

அல்லும் பகலும், நாளும் கிழமையும்,

அயராது சிந்தித்துச் சிறப்பான முடிவெடுத்து,

அரசின் நலத் திட்டங்கள் பலவும் வடித்துத் தந்து,

பலகோடி மக்களுக்கும் பயன் கிடைக்கச் செய்திட,

அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள்,

காலந்தவறாது கடமையாற்றிடக் கட்டளையிட்டு,

கழக அரசு தருவதல்லவோ நல்லாட்சி என்றும்,

பொற்காலம் படைத்த புனிதரன்றோ முதல்வரென்றும்,

முத்தமிழ் அறிஞர் கலைஞரை வாழ்த்திடும் நாளன்றோ இது!

சிற்றூரில் பிறந்து பேரூரை எல்லாம் ஆள்பவரும்,

சிறுகுடிச் சேயாகிப் பெருங்குடித் தாயானவரும்,

நான்காம் தரச் சமுதாயம் தானென்றறிவித்தே,

நாட்டினிலே முதல் குடிமகனாக உயர்ந்தவரும்,

தந்தை பெரியார் தம் குறிக்கோளை நிலைநிறுத்த,

அய்யன் அண்ணாவின் நெறிதன்னில் நடந்திடவே,

அண்ணாவின் இதயத்தையே கடன் வாங்கிக் கொண்ட

கண்ணான கலைஞரின் பிறந்த நாளன்றோ இது!

அறிவுச் சூடேற்றிய தந்தை பெரியாரும்,

தமிழ்த் தென்றல் தவழவிட்ட அறிஞர் அண்ணாவும்,

எந்த நாளிலும் எய்திடாத இறும்பூதினை எய்துமாறு

எழுச்சிiட்டிய திருநாளன்றோ இந்நாள்!

யான்வாழும் நாளும் பண்ணன் வாழியவென்றே,

அந்த நாள் புலவன் நெஞ்சுகந்து வாழ்த்தியவா

இந்த நாள் தமிழர் குதூகலிக்கும் நாளன்றோ இது!

தனியொரு தலைவன் பிறந்தநாள்தானே அதுவெனிலோ

கலைஞர் என்னும் தனிமனிதன் ஒருவன் பிறந்ததாலே,

வாழ்வு பெற்ற இனத்தாரும், வளம்பெற்ற நாட்டாரும்,

இழிவகற்றி ஏற்றம் பெற்ற, ஒடுக்கப்பட்ட பிற்பட்ட மக்களும்,

உடமைக்கும், கல்விக்கும் உரிமை கொண்டிட்ட மகளிரும்

தென்னகத்தில் படர்ந்த பல்லவர் ஆட்சி நாள் முதலாய்,

தமிழர்தம் தாய்மொழியாம் தண்டமிழ் தாழ்ந்திட,

வந்தாரின் வைதிக ஆதிக்கம் நாளும் வளர்ந்திட,

பிறமொழி கொலுவிருக்க நீசமொழியெனப்பட்ட தமிழ்

இழந்த உரிமையை மீட்டிடும் நெடுநாள் போரில்

ஆங்கில மொழிவழி வாய்த்திட்ட ஆய்வறிவால்

உயர்தனிச் செம்மொழியே தமிழென உலகு உணர்ந்திட்ட,

உண்மைத் தகுதியை நடுவண் அரசும் முறையுடன் ஏற்று

தமிழ்மொழி ஒரு செம்மொழியென அறிவித்திடச் செய்த

தமிழ்த்தாயின் தலைமகனாம் கலைஞரின் பிறந்தநாள்!

செம்மொழித் தமிழ் அன்னையின் சீர்பாடும் திருநாளன்றோ!

கருணாநிதியின் 87-ம் ஆண்டு பிறந்த நாள் விழா, ஜுன் 3-ல் தொடங்கியே ஜுன் 23 முதல் 27 நாட்களில் கொண்டாடப்படும் கோவை, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில்

பொங்குமாங் கடலாய் ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளத்தின்

வானளாவும் வாழ்த்து முழக்கங்களுடன் நிறைவடையவிருக்கிறது.

"அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்,

இந்த மாநிலம் முழுதாண்டிருந்தார்?''

என்னும் புரட்சிக் கவிஞரின் வினாவிற்கு விடை அளிக்கும் வகையில்,

பதினெட்டு ஆண்டுகள் தமிழ்த் திருநாட்டின் முதல்வராய் விளங்கி, முதல்வர்களுக்கெல்லாம் ஒரு முதல்வராகத் தகுதியினால் உயர்ந்து, முத்து முத்தான சாதனைகள் பல படைத்து, சமத்துவச் சமுதாயம் காண அடுக்கடுக்காகச் சமூகநலத் திட்டங்கள் வழங்கிய வித்தகர் கலைஞரின் பிறந்தநாளை, இந்த திருநாட்டில் பிறந்தவரெல்லோரும் பெருமையுடன் போற்றிக் கொண்டாடுவர் என்பதில் ஐயமில்லை.

ஆம்! அந்த நாளைக் கொண்டாடும் கழகத் தோழர்கள், ஊரெங்கும் கழகக் கொடி உயர்த்தி, ஒலிபெருக்கி மூலம் வாழ்த்துப் பண் எழுப்பி, சிறார்க்கு எல்லாம் இனிப்பு வழங்கி, வறியவர்க்கும், வாட்டமுற்றோர்க்கும், முதியோர்க்கும், மாற்றுத் திறனாளிகட்கும், சுவையான உணவளித்துக் கொண்டாடக் கேட்டுக்கொள்கிறேன். கொண்டாடும் நிகழ்ச்சி ஒவ்வொன்றிலும், கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு செய்தியை ஒலிபரப்பி அனைவரையும் மாநாட்டிற்கு அழைத்திடத் தவறாதீர் என வேண்டுகிறேன்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+