நெல்லை மாவட்டத்தில் தொடர் கொள்ளை-7 பேர் கைது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 23 பவுன் நகை மற்றும் லேப்டாப் கைப்பற்றப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்த வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களை கண்டுபிடிப்பதற்காக சங்கரன்கோவில் டிஎஸ்பி சண்முகம், தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயசில், திருப்பதி, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சாகுல் கமீது, ஆடிவேல், தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சாகுல் கமீது ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். சங்கரன்கோவில் பகுதியில் நேற்று நடத்திய வாகன சோதனையின் போது அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பேட்டை செந்தமிழ் நகரை சேர்ந்த முருகன், மோகன்ராஜ், கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள பனையூரை சேர்ந்த ராஜா, சாக்கு குமார், புளியங்குடியை சேர்ந்த கருப்பசாமி, மதுரை மாவட்டம் சம்மட்டி புரத்தை சேர்ந்த சண்முகம், வாசுதேவநல்லூர் சிந்தாமணி பேரின்புரத்தை சேர்ந்த ராமர், ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
கொள்ளை கும்பலின் தலைவானாக பேட்டையை சேர்ந்த முருகன் செயல்பட்டுள்ளார். இவரது தலைமையில் பேட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், தென்காசி, மற்றும் மதுரை மாவட்டத்திலும் இக்கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. அவர்களிடம் இருந்து 23 பவுன் நகைகள், மற்றும் லேப்டேப் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்னும் சில நாட்களில் இந்த கொள்ளை கும்பல் மும்பையில் உள்ள தொழிலதிபர் ஓருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பையில் உள்ள ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டது. நேற்று இந்த கொள்ளை கும்பல் போலீசிடம் சிக்கியுள்ளதால் மும்பையில் நடைபெற இருந்த கொலை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலை செய்ய திட்டமிட்ட தொழிலதிபர் யார், யாரிடம் பேரம் பேசப்பட்டது என்பது குறித்து தனிப்படையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் நடந்த தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேரை தனிப்படையினர் கைது செய்த சம்பந்தப்பட்ட தனிப்படையினரை எஸ்பி ஆஸ்ரா கர்க் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications