குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலின் தலைவி லலிதா குறித்து பரபரப்புத் தகவல்கள்

குழந்தை கடத்தல் விவகாரத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த தனலட்சுமி (35), சென்னை பெரம்பூரை சேர்ந்த கிரிஜா (45), அவரது கணவரான ஆட்டோ டிரைவர் சிவா (48), அதே பகுதியை சேர்ந்த ராணி (48) மத போதகர்களான சென்னை அல்போன்ஸ் சேவியர், திண்டிவனம் செல்வம் (44), லலிதா (34) ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இதுவரை 3 பெண், 5 ஆண் குழந்தை களை தனிப்படை போலீசார் மீட்டனர். நீதிமன்ற அறிவுரையின்படி ஒரு பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீதமுள்ள 5 குழந்தைகளின் பெற்றோர் யார் என்று தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் வரை குழந்தைகள் தற்போது வளர்த்து வருபவர்களிடமே தொடர்ந்து இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக பிடிபட்ட கிரிஜாவை 2 முறை போலீசார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். அப்போது லலிதா குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுச்சேரிக்கு விரைந்த போலீஸார் லலிதாவை பிடித்து விசாரணை நடத்தினர்.
கிரிஜா கடத்தி வந்த குழந்தைகளை லலிதாவிடம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரியில் இருந்து லலிதா மூலம் விற்கப்பட்ட 4 குழந்தைகளை போலீசார் மீட்டனர்.
கும்பலின் தலைவி லலிதா...
லலிதாதான், இந்தக் கும்பலின் தலைவியாக செயல்பட்டு வந்துள்ளார். மனித உரிமை அமைப்பின் தலைவி என்ற போர்வையில் அவர் குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு குழந்தைகளை கடத்தி தந்தவர்கள்தான் கிரிஜா, தனலட்சுமி. இவர்கள் குழந்தைகளை கடத்தி ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை விற்றுள்ளனர். இதன் மூலம் லலிதாவிற்கு பணம் குவிந்துள்ளது.
8வது படித்தவருக்கு கோடிக்கணக்கில் சொத்து
8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள லலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். புதுச்சேரியில் புதிதாக கல்யாண மண்டபம் ஒன்றையும் கட்டி வருகிறார். கிரிஜா தவிர தமிழகத்தில் மற்ற குழந்தை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
பெங்களூரில் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைகளை அதிக விலைக்கு விற்று இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் புதுச்சேரியில் தனக்கு உள்ள தொடர்புகளை வைத்து பிரான்ஸ், போன்ற வெளிநாடுகளுக்கு குழந்தைகளை கடத்தி விற்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். காரணம் லலிதாவின் சொத்து மதிப்பை பார்க்கும் போது அவர், வெளிநாடுகளுக்கு குழந்தைகளை விற்று கோடி, கோடியாய் பணம் சம்பாதித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
லலிதாவை போலீஸ் காவலில் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை அல்லது மறுநாள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள். போலீஸ் விசாரணையில் லலிதா பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
குழந்தை கடத்தலுக்கு ஆள் வைத்தது போல, குழந்தையை விற்கவும் அவர் ஆட்கள் வைத்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே அவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications